சசிகலா மீது குற்றம்சாட்டிய ரூபா ஐபிஎஸ் மீண்டும் பணியிடமாற்றம்.. பெங்களூரில் 5 டிசிபிகள் டிரான்ஸ்பர்
பெங்களூர்: பெங்களூர் சிறையிலுள்ள சசிகலா சலுகைகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டிய ஐபிஎஸ் அதிகாரி ரூபா உட்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகளை ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்துள்ளது கர்நாடகாவிலுள்ள எடியூரப்பா அரசு.
பெங்களூர் நகரில் மட்டும் 5 டிசிபிக்கள் மாற்றப்பட்டுள்ளனர். கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரலாக (ஏடிஜிபி) பதவி வகித்த, 1995 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான உமேஷ்குமார், பெங்களூர் பொருளாதார குற்றங்கள் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரலாக (ஏடிஜிபி) நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூர் பிரிவு, ரயில்வே இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி.பி)யாக இருந்த 2000மாவது ஆண்டு பேட்ஜ் அதிகாரியான ரூபா, உள்துறை துறை அமைச்சக செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை டூ பெங்களூர்.. ஜஸ்ட் ஒன்னே முக்கா மணி நேரம்.. புல்லட் ரயிலில் பறந்து வரலாம்.. ஏற்பாடு தீவிரம்
பெங்களூர் டிசிபிகள்
பெங்களூரின் துணை போலீஸ் கமிஷனர்கள் (டிசிபி) 5 பேர் மாற்றப்பட்டுள்ளனர். பெங்களூர் வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சசி குமார் வயர்லெஸ் பிரிவு எஸ்பியாகவும், அந்த பதவியிலிருந்த தர்மேந்தர் குமார், வடக்கு டிசிபியாகவும் மாற்றப்பட்டனர்.
மண்டலங்கள்
தெற்கு மண்டல டிசிபி ரோஹினி மற்றும் மேற்கு மண்டல டிசிபி ரமேஷ் இருவரும், சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளனர். பெங்களூர் மத்திய மண்டல டிசிபி சேத்தன் சிங் ரத்தூர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஒயிட்பீல்டு டிசிபி அனுசேத் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஒயிட்பீல்டு டிசிபியாக சிஐடி பிரிவில் பணியாற்றிய தேவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
சசிகலா சிறையில்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி இருவரும் பெங்களூர் சிறையில் சுதந்திரமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான தகவல்களை வெளியிட்ட அப்போதைய சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
வினய் குமார் அறிக்கை
சசிகலாவுக்கு உண்மையிலேயே சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் குழு தாக்கல் செய்த அறிக்கையில் தான் வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணமாகியுள்ளதாகவும் ரூபா பின்னர் தெரிவித்திருந்தார்.
மறுபடி பணியிடமாற்றம்
இந்த நிலையில் அவர் ரயில்வே ஐஜிபி என்ற பதவியிலிருந்து, ஆக்டிவான இடத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் சசிகலா விவகாரம் வெடித்து கிளம்பிய பிறகு, அவர் இதுவரை சிறைத்துறை சார்ந்த பதவிகளில் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.