தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு போன மருமகள்.. சந்திரயான் 2.. இஸ்ரோ சிவன் நெகிழ்ச்சி!
பெங்களூர்: இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் நிலவின் வட்டப்பாதைக்குள் நுழைந்தது மணமகள் புகுந்த வீட்டுக்கு செல்வதை போன்றதாகும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 3850 கிலோ எடை கொண்ட சந்திரயான் 2 விண்கலம் மார்க் 3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திரயான் 2 இன்று பூமியின் சுற்று வட்டபாதையிலிருந்து நிலவின் சுற்று வட்ட பாதைக்கு சென்றது. தற்போது நிலவின் வட்டபாதையில் சுற்றி வருகிறது.
முன்னேறி
செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவின் தென்துருவத்துக்கு செல்லும். இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் திட்டமிட்டபடியே சந்திரயான் 2 நிலவை நோக்கி முன்னேறியது. சந்திரயான் 2 செலுத்தப்பட்ட நாள் முதல் இன்று திட்டமிட்டபடியே முன்னேறி வருகிறது.
நிலவுக்கு
நாளை முதல் 4 நாட்களுக்கு அடுத்தடுத்து மாற்றங்கள் ஏற்படும். செப்டம்பர் 2-ஆம்தேதி விக்ரம் லேண்டர் சந்திரயானில் இருந்து பிரிந்து செல்லும். மணமகள் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு செல்வது போல் சந்திரயான் 2 பூமியில் இருந்து நிலவுக்கு சென்றுள்ளது.
சந்திரயான்
வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி, திட்டமிட்டப்படி அதிகாலை 1.55 மணி அளவில் சந்திரயான் 2 தரையிறக்கப்படும். எங்களுக்கு அது நல்ல எனர்ஜியாக இருக்கும். நிலவில் கால் பதித்து சந்திரயான் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க போகிறது.
நிச்சயம்
இந்த நிகழ்வை காண பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடைசி நிமிடத்தில் அவர் நிச்சயம் வருவார் என எதிர்பார்க்கிறோம் என்றார் இஸ்ரோ தலைவர் சிவன். இது போல் அறிவியல் ரீதியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் இந்த நிகழ்வை பிரதமருடன் சேர்ந்து காணலாம் என இஸ்ரோ ஏற்கெனவே டுவிட்டரில் பதிவிட்டிருந்தது.