3 ஆண்டுக்கு முன் தோசை, சட்டினியில் கொடிய விஷம் கலப்பு .. போட்டி நாடுகள் சதி?.. இஸ்ரோ விஞ்ஞானி பகீர்
பெங்களூரு: இஸ்ரோவுக்குள் அதி நவீன உளவு நிறுவனம் ஊடுருவியுள்ளதாகவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு கொடிய விஷம் கொடுக்கப்பட்டதாகவும் முன்னாள் இந்திய விஞ்ஞானியும் விண்வெளி பயன்பாட்டு முன்னாள் இயக்குநருமான தபன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவின் விஞ்ஞானியாகவும் விண்வெளி பயன்பாட்டு முன்னாள் இயக்குநருமாக இருந்தவர் தபன் மிஸ்ரா. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கொடிய ஆர்சனிக் ட்ரொக்ஸைடு விஷம் கொடுக்கபபட்டதாக கூறியுள்ளார்.
மே 23, 2017 ஆம் ஆண்டு பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் பதவி உயர்வு நேர்காணலின்போதுதான் இந்த விஷம் கொடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
விளைவு
தான் சாப்பிட்ட தோசை சட்னியில் கொடிய விஷத்தை கலந்து இருக்கலாம். இதன் பின்னணி என்னவெனத் தெரியவில்லை. ஆனால் இது ஒரு முக்கியமான தொழில்நுட்பத்தில் பணியாற்றுவதன் விளைவாக கூட இருக்கலாம் என்று மட்டுமே என்னால் யூகிக்க முடிகிறது.
குண்டர்கள்
நிச்சயமாக இதை யாரோ ரவுடியோ குண்டர்களோ செய்திருக்க வாய்ப்பில்லை. இஸ்ரோ அமைப்பில் அதிநவீன உளவு நிறுவனம் ஊடுருவியுள்ளது. இதுகுறித்து அவர் லாங் கெப்ட் சீக்ரெட் என்ற பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் ரேடார் இமேஜிங் சாட்டிலைட் என்னும் மிக உயரிய தொழில்நுட்பத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றினேன்.
மடங்கு
இதனால் எனக்கு யாாரவது விஷம் கொடுத்திருக்கலாம். இந்த தொழில் நுட்பம் மூலம் பூமியின் எந்த பகுதியையும் இரவு பகல் வித்தியாசமில்லாமல் கண்காணிக்க முடியும். மேலும் இந்த தொழில்நுட்பத்தை வேறு நாடுகளிடமிருந்து நாம் வாங்கும் சூழல் ஏற்பட்டிருந்தால் அது 10 மடங்கு விலை அதிகம் கொண்டதாக இருந்திருக்கும்.
விசாரணை
எனவே இந்த தொழில்நுட்பத்தை அறிந்தவன் நான் என்ற வகையில் இந்த தொழில்நுட்பத்தை கையாளும் போட்டி நாடுகள் ஏதேனும் என்னை கொலை செய்யும் நோக்கில் இந்தச் சதிச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்ததுடன் மத்திய அரசு இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.
சம்பவம்
கடந்த 2019-ஆம் ஆண்டு எனது பாதுகாப்பு உடைக்கப்பட்டு விஷவாயு அருந்த வைக்கப்பட்டேன். அது ஹைட்ரஜன் சயனைடு, இது ஹைபோக்ஸியேட்டுகளாக இருக்கலாம். இதற்கு நீண்ட கால சிகிச்சை எடுத்து வருகிறேன். சந்திரயான் 2 திட்டம் தொடங்கப்பட்ட இரு தினங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் நடந்தது என அவர் தெரிவித்துள்ளார்.