பிப்.6ல் விண்ணில் பாய்கிறது ஜிசாட் 31… இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ தீவிரம்
பெங்களூரு:இஸ்ரோவின் 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்-31 செயற்கைகோள், ஃபிரெஞ்ச் கயானாவிலிருந்து வரும் 6ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக தொடங்கி உள்ளன.
நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக, அதி நவீன செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில், 40-வது செயற்கை கோளாக ஜிசாட்-31-ஐ இஸ்ரோ தயாரித்துள்ளது.
2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்ட இந்த ஜிசாட்-31 செயற்கைகோள், பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் வரும் 6ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு விண்ணில் பயணித்து சேவையாற்ற உள்ள இந்த செயற்கைகோளால், இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் பலன் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிடிஹெச் சேவை, டிவி ஒளிபரப்பு உள்ளிட்டவற்றுக்கும் ஜிசாட்-31 செயற்கைகோள் பயன்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செயற்கைகோளை ஏவும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.