கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு.. முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவின் வீட்டில் ஐடி ரெய்டு
பெங்களூரு: காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடகா முன்னாள் துணை முதல்வருமான ஜி பரமேஸ்வராவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஜி பரமேஸ்வராவுக்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா முன்னாள் துணை முதல்வரும், கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாகிய ஜி பரமேஸ்வரா உறுப்பினராக உள்ள டிரஸ்டுக்கு மருத்துவ சேர்க்கையில் ஏராளமான கருப்பு பணம் குவிந்திருப்பதாக புகார் எழுந்தது.
30 இடங்களில் ரெய்டு
இதையடுத்து ஜிபரமேஸ்வராவின் பெங்களூரு வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். தும்கூருவில் உள்ள பரமேஸ்வராவுக்கு சொந்தமான சித்தார்த்த குழும நிறுவனத்திலும் நான்கு பேர் கொண்ட வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
எந்த பிரச்சனையும் இல்லை
இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்த பரமேஸ்வரா, இந்த சோதனைகள் எங்கு நடத்தப்படுகிறது என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் சோதனையிடட்டும். என்னிடம் எந்த பிரச்னையும் இல்லை. ஒரு வேளை எங்கள் தரப்பில் ஏதேனும் இருந்தால், அதை நாங்கள் சரிசெய்வோம் என்றார்.
முன்னாள் அமைச்சர் ஜலப்பா
முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்எல் ஜலப்பாவுக்கு சொந்தமாக கோலாரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
காங்கிரஸ் கண்டனம்
இந்த சோதனைக்கு கர்நாடாக முன்னாள் முதல்வரும் , அம்மாநில எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த சோதனைகள் அரசில் காரணங்களுக்காக நடத்தப்படுகிறது. கொள்கை மற்றும் ஊழல் பிரச்சினைகளில் எங்களை எதிர்கொள்ளத் தவறியதால் அவர்கள் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களை மட்டுமே குறிவைக்கின்றனர். அத்தகைய தந்திரங்கள் மூலம் எங்களை அடக்கிவிடமுடியாது என்றார். முன்னதாக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் அமலாக்கத்துறை சோதனைக்கு பின் கைது செய்யப்பட்டார். இப்போது பரமேஸ்வரா சோதனையில் சிக்கி உள்ளார்.