கர்நாடகாவில் அடேங்கப்பா திருப்பம்.. எடியூரப்பா அரசுக்கு ஆதரவு அளிக்க குமாரசாமி கட்சி ரெடி
Recommended Video
பெங்களூர்: கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவு அளிக்க குமாரசாமியை மதசார்பற்ற ஜனதாதள கட்சி எம்எல்ஏக்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
கர்நாடகாவில், குமாரசாமி தலைமையில், மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் காங்கிரசை சேர்ந்த 12, மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் என மொத்தம் 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதை தவிர்த்தனர்.
இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான ஓட்டெடுப்பில் குமாரசாமி அரசு தோற்று கவிழ்ந்தது. இதையடுத்து பாஜக சார்பில் ஆட்சியமைக்க கோரிக்கைவிடுக்கப்பட்டது. ஆளுநரின் அழைப்பை ஏற்று, எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார்.
பாஜக பலம்
பாஜகவுக்கு மொத்தம் 105 உறுப்பினர்கள் உள்ளனர். சட்டசபையின் மொத்த பலம் 224 ஆகும். எனவே சிம்பிள் மெஜாரிட்டிக்கு தேவை 113 எம்எல்ஏக்கள். தற்போதைய அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு தேர்தல் நடைபெற்று அதில் குறைந்தபட்சம் 8 இடங்களையாவது பாஜக வென்றால், ஆட்சியை தக்க வைத்துவிடலாம்.
பாஜகவுடன் இணக்கம்
இந்த நிலையில்தான் 34 எம்எல்ஏக்கள் பலம் கொண்ட குமாரசாமியின் மஜத பாஜகவுடன் இணக்கமாக போக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இடைத் தேர்தல்களில் ஒருவேளை போதிய இடங்களை பாஜக வெல்ல முடியாவிட்டால், அப்போது எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டி வரும். அப்படி ஒரு சூழல் வந்தால், பாஜகவுக்கு ஆதரவாக மஜத செயல்பட்ட வாய்ப்பு அதிகம். இதனால் அரசு தப்பிக்கும்.
கோபத்தில் குமாரசாமி
தனது அரசை கலைப்பதில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கோஷ்டிதான் தீவிரமாக இருந்தது என்று குமாரசாமி கோபத்தில் உள்ளார். எனவே பாஜகவுடன் இணக்கமாக போய்விடலாம் என்ற எண்ணம் குமாரசாமிக்கு வந்துள்ளது. காங்கிரசை நிர்மூலப்படுத்த இது தக்க வழி என அவர் நினைக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தின் போது கூட பாஜகவை குமாரசாமி அதிகம் தாக்கி பேசவில்லை. காங்கிரசை சேர்ந்த உறுப்பினர்கள்தான் பாஜகவை அதிகம் தாக்கி பேசி வருகிறார்கள்.
வெளியிலிருந்து ஆதரவு
இந்த நிலையில், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற மஜத எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, நிருபர்களிடம் பேசிய அக்கட்சி மூத்த எம்எல்ஏ ஜி.டி.தேவகவுடா, "பாஜக அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு அளிக்கலாம் என சில எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்தனர். சில எம்எல்ஏக்களோ, கட்சியை பலப்படுத்த, சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவதே நல்லது என்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
குமாரசாமி தந்திரம்?
ஜி.டி.தேவகவுடா, குமாரசாமி அவர் தந்தை தேவகவுடா போன்றோருக்கு நெருக்கமானவர். எனவே, பாஜகவுடன் மஜத நெருக்கமாவது போன்ற ஒரு தோற்றத்தை ஜி.டி.தேவகவுடா வாயிலாக குமாரசாமி வெளியே பரப்பும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இது காங்கிரசை தனித்து விடும் முயற்சியாகும். எனவே, கர்நாடக அரசியலில் புதிய புயல் வீசத் தொடங்கியுள்ளது.