அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவி?... கர்நாடகா முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல்
Recommended Video
பெங்களூரு: அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக, அமெரிக்கா சென்றிருந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று மாலை பெங்களூரு திரும்பினார். இதனையடுத்து, பெங்களூருவில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் வேணுகோபால், சித்தராமையா, துணை முதல்வர் பரமேஸ்வர் ஆகியோருடன் முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, பெங்களுருவில் நடந்த மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் குமாரசாமி பங்கேற்றார்.
அதில், நாளை அமைச்சரவையை கூட்டி புதியவர்களுக்கு பதவி அளிப்பது பற்றி குமாரசாமி ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதிருப்தியில் உள்ள 14 எம்.எல்.ஏ.க்களுக்கும் அமைச்சர் பதவி கொடுப்பது பற்றி குமாரசாமி விவாதித்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
கர்நாடக ஆளும் கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவில் முடிவு ஏற்பட்டால், சித்தராமையா முதல்வராக பதவி ஏற்பதில் ஆட்சேபனை இல்லை என்று பெங்களூருவில் நடந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டத்துக்கு பின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.