பேசாம சட்டசபையை கலைச்சுடுங்க... மஜத தலைவரின் பேச்சால் கர்நாடக அரசியலில் பரபரப்பு!
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், சட்டசபையை கலைப்பதுதான் சிறந்த வழியாக இருக்கும்," என்று மஜத கட்சியின் மூத்தத் தலைவர் பசவராஜ் ஹோரட்டி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில், குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. குமாரசாமி ஆட்சி ஓர் ஆண்டை நெருங்கிவிட்ட நிலையில், அவரின் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தே தீரும் முனைப்புடன் பாஜக கங்கணம் கட்டி செயல்பட்டு வருகிறது.
மறுபுறத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சித்தராமையா மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்று தொடர்ந்து விருப்பத்தை பதிவு செய்து வருகின்றனர். இதற்கு குமாரசாமியின் மஜத தலைவர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால், முதல்வர் குமாரசாமி ரெண்டு பக்கமும் இடி என்ற நிலையில் சிக்கி தவிக்கிறார்.
இந்திரா காந்தியை போல் என்னையும் சுட்டுக்கொன்றுவிடுவார்கள்.. அலறும் அரவிந்த் கெஜ்ரிவால்!
இந்த சூழலில், அக்கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான பசவராஜ் ஹோரட்டி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியவதாவது,"ஒருபக்கம் பாஜக ஆட்சியை கவிழ்த்தே தீருவேன் என்று வேலை செய்கிறது. மறுபுறத்தில் சித்தராமையா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே கூறி வருகின்றனர்.
இதற்கு பேசாமல் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பதுதான் சிறந்த வழியாக தெரிகிறது. இந்த குழப்பத்திற்கு தீர்வு காண்பதற்கு ஆட்சியை கலைப்பதே சிறந்த வழியாக என்னுடைய மனதில் படுகிறது. கடந்த ஓர் ஆண்டில் முதல்வர் குமாரசாமி முதல்வராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். கூட்டணி தர்மப்படியாவது, அவர் சுதந்திரமாக பணிபுரிவதற்கான வாய்ப்பு தரப்பட வேண்டும்," என்று பசவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையிலான விரிசல் பெரிதாகி இருப்பதாகவும் கருதப்படுகிறது.
இதனிடையே, இரு கட்சித் தலைவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ட்விட்டர் மூலமாக தனது கருத்தை அம்மாநில முதல்வர் குமாரசாமி பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், "மத்தியில் புதிய ஆட்சியை அமைப்பதற்கான சமயத்தில் நின்று கொண்டிருக்கிறோம். மத்தியில் பாஜக அல்லாத ஆட்சியை அமைப்பதற்கான முழு முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும். காங்கிரஸ் மற்றும் மஜத கட்சித் தலைவர்கள் தெரிவித்து வரும் சர்சைக்குரிய கருத்துக்கள் இந்த முயற்சிகளை கெடுத்துவிடும்.
இரண்டு கட்சித் தலைவர்களும் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தவிர்த்து, மத்தியில் புதிய அரசு அமைப்பதற்கான பணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். ," என்று கூறி இருக்கிறார். முதல்வர் குமாரசாமியின் ட்விட்டர் பதிவு மூலமாக இந்த பிரச்னை தற்காலிகமாக நின்று போகும் என்று கருதப்படுகிறது.