பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை!
பெங்களூரு : கர்நாடகாவிலும், அதன் தலைநகர் -பெங்களூருவிலும் வியாழக்கிழமை ஒரே நாளில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய உயர்வை கண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,052 பேருக்கு புதிதாக தொற்று பாதித்துள்ளது.
கர்நாடகாவில் லாக்டவுன் தளர்வுகளுககு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பெங்களூருவில் புதன்கிழமை 378 ஆக இருந்த பாதிப்பு வியாழக்கிழமை 500 ஆக உயர்ந்துள்ளது. நேற்றை விட 34 சதவீதம் இது அதிகமாகும்.
மொத்த பாதிப்பு
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 36491 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்தை கடந்துள்ளது.
கட்டுப்பாடுகள்
கர்நாடகாவில் ஒட்டுமொத்தமாக 2,97,01,032 டோஸ்கள் தடுப்பூசி வியாழக்கிழமை நிலவரப்படி போடப்பட்டுள்ளன . கொரோனா இரண்டாவது அலையின் போது அமல்படுத்தப்பட்ட கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகளை, கர்நாடக அரசு சமீபத்தில் தொற்று குறைத்ததால் தளர்த்தியது.
உயர்வு
கடந்த ஜூலை 19 முதல் சினிமா தியேட்டர்களை மீண்டும் திறக்க அனுமதித்தது. இரவு ஊரடங்கு உத்தரவின் காலத்தை ஒரு மணி நேரம் குறைத்தது. கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் ஜூலை 26 முதல் நேரடி வகுப்புகளை நடத்த கர்நாடகா அரசு அனுமதித்தது. இந்த சூழலில் மீண்டும் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.
கேரளா மகாராஷ்டிரா
அண்டை மாநிலங்களான கேரளா, மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருவதால் அங்கிருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் ஆக்கி உள்ளது. எல்லையில் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது.