அச்சம், பக்க சார்பு கூடாது-ஜெ.வுக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி குன்ஹா பிரிவு உபசார விழாவில் பேச்சு
பெங்களூரு: நீதித்துறையில் பணியாற்றுகிறவர்கள் அச்சமோ, பக்கச்சார்புடனோ நடந்த்உ கொள்ள வேண்டியது இல்லை என கர்நாடகா நீதிபதி குன்ஹா தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி குன்ஹா.
கர்நாடகாவின் மங்களூருவில் 1959-ம் ஆண்டு ஏப்ரல் 7-ல் பிறந்தவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 2016-ம் ஆண்டு கர்நாடகா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஜெ., சசிகலாவுக்கு சிறை விதித்த குன்ஹா
விசாரணை நீதிமன்றத்தில் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தவர் நீதிபதி குன்ஹா. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தவரும் குன்ஹாதான்.
ஜெ. வழக்கு
நீதிபதி குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நிறுத்தி வைத்தார். ஆனால் உச்சநீதிமன்றமோ நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை ஏற்று சிறை தண்டனையை உறுதி செய்தது. இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் போது ஜெயலலிதா மறைந்துவிட்டார். அதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் 3 பேரும் சிறை தண்டனை அனுபவித்தனர்.
பணி ஓய்வு
நீதிபதி குன்ஹா சில நாட்களுக்கு முன்னர் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் பேசிய கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சிறப்பு நீதிபதியாக இருந்து 216 கிரிமினல் வழக்குகளை மிக குறுகிய காலத்தில் விசாரித்து முடித்தவர் குன்ஹா என புகழாரம் சூட்டினார். அதேபோல் எடியூரப்பா வழக்கு, டிகே சிவகுமார் வழக்கு என பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை கொடுத்தவர் குன்ஹா.
அச்சம் தவிர்
இந்த நிகழ்ச்சியில் பேசிய குன்ஹா, 2001-ம் ஆண்டு மாவட்ட நீதிபதிகளுக்கான நியமனத்துக்காக கர்நாடகா உயர்நீதிமன்றம் எழுத்துத் தேர்வு நடத்தியது. இந்த தேர்வினால்தான் தம்மால் நீதித்துறைக்குள்ளேயே வர முடிந்தது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் குன்ஹா. மேலும் நீதிபதிகள் அச்சத்துக்கும் பக்கச்சார்புக்கும் இடம்தராமல் பணியாற்ற வேண்டும் என்றும் குன்ஹா கேட்டுக கொண்டார்.