எல்லையில் பதற்றம்.. 25 நாட்கள் விடுப்பை ரத்து செய்து விட்டு ஸ்ரீநகர் புறப்பட்ட ராணுவ வீரர்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் எல்லையில் பதற்றம் நிலவி வருவதை அடுத்து உயரதிகாரியின் அழைப்பின் பேரில் 25 நாட்கள் விடுப்பை ரத்து செய்து விட்டு ஸ்ரீநகர் புறப்பட்டு சென்ற ராணுவ வீரரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய விமானியை அபிநந்தனை பிடித்து வைத்துள்ளதால் போர் மூளும் சூழல் ஏற்பட்டது. எனினும் உலக நாடுகள் அழுத்தம் கொடுத்ததால் அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இதனிடையே கர்நாடக மாநிலம் கலபுர்கி பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவ் கும்பார் கில்கி. இவர் கடந்த 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
போன்
இந்த நிலையில் இவர் 25 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊரான கல்புர்கிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தார். தனது மனைவி, குழந்தையுடன் ஓரிரு நாட்களை செலவிட்டார். இந்த சூழலில் அவருடைய உயரதிகாரியிடம் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு அவருக்கு போன் வந்தது.
இன்முகம்
மறுமுனையில் பேசிய அதிகாரி, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் மூளும் சூழல் உள்ளதால் உடனடியாக ஸ்ரீநகருக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அங்கிருந்து புதன்கிழமை காலை புறப்பட்டார். அவரை அவரது மனைவி உள்பட குடும்ப உறுப்பினர்கள் இன்முகத்துடன் அனுப்பி வைத்தனர்.
சிறு குழந்தை
இதுகுறித்து அவரது சகோதரர் சரணு கும்பார் கூறுகையில், எனது தந்தை 32 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் தற்போது இல்லை என்றார் அவர். 2 ஆண்டுகளுக்கு முன் திருமணமான மகாதேவுக்கு மனைவி முனிஷாவும் 6 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளனர்.
பெருமை
இதுகுறித்து அவரது மனைவி முனிஷா கூறுகையில் போர் மூளும் அபாயம் இருப்பதால் எனது கணவரை மீண்டும் அழைத்தனர். அதிகாரி அழைத்தவுடன் தாய் மண்ணிற்கு சேவையாற்ற வேண்டும் என மகாதேவ் சென்றது பெருமையாக உள்ளது என்றார்.