என் முதுகில் கை வைத்து தடவினார் நடிகர் அர்ஜூன்.. கன்னட நடிகை ஸ்ருதி பரபரப்பு புகார்
Recommended Video
பெங்களூரு: கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், நடிகர் அர்ஜூன் சர்ஜா மீது பரபரப்பு பாலியல் அத்துமீறல் புகாரைக் கூறியுள்ளார்.
அர்ஜூன் சர்ஜா வேறு யாருமல்ல, நம்ம ஆக்ஷன் கிங் அர்ஜூன்தான். ஒரு படத்தின் ஷூட்டிங்கின்போது தன்னிடம் அர்ஜூன் அத்துமீறியதாக கூறியுள்ளார் ஸ்ருதி. மீ டூ ஹேஷ்டேகில் இணைந்து இந்த பரபரப்பைக் கிளப்பியுள்ளார் ஸ்ருதி.
சமீப காலமாக பல்வேறு பெண் பிரபலங்கள் பாலியல் அத்துமீறல் குறித்த புகார்களைக் கூறி வரும் நிலையில் தமிழ் சினிமாவில் வெகு பிரபலமான கன்னட நடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஸ்ருதி ஹரிஹரன் தனது முக நூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
[நிர்வாண போஸ்.. முத்தப் போராட்டம்.. புலியாட்டம்.. யார் இந்த ரெஹனா பாத்திமா?]
பாலியல் வக்கிரம் பிடித்த சமூகம்
#metoo இயக்கம் மிக மிக சரியான சமயத்தில் வந்துள்ளது. இது பாலியல் வக்கிரம் படைத்த நமது சமூகத்திடமிருந்து பெண்களை மீட்க உதவும். அதற்கு இந்த மீடூ ஒரு நல்ல முயற்சியாகும். எனது அமைதியைக் கலைக்கவும் இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
பலமுறை பாதிக்கப்பட்டேன்
பலமுறை நான் பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாகியுள்ளேன். வளரும் கலைஞர்களுக்கு வரும் அதே பிரச்சினைதான் எனக்கும் வந்தது. தேவையில்லாத ஆபாசப் பேச்சுக்கள், வக்கிர செய்கைகள், சைகைகள் என நான் பல அத்துமீறல்களை சந்தித்துள்ளேன். இதனால் நான் பலமுறை அசவுகரியமாக உணர்ந்துள்ளேன்.
2016ல் அதிர்ச்சி சம்பவம்
நான் பலமுறை இதுபோல சந்தித்திருந்தாலும், அதனால் நான் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால் 2016ம் ஆண்டு மனதளவில் பெரும் அதிர்ச்சியைச் சந்திக்க நேரிட்டது. இந்த முறை மிகப் பெரிய நடிகர் ஒருவரால் நான் பாதிக்கப்பட்டேன். இதிலிருந்து வெளியே வர நான் பெரும் சிரமப்பட்டு விட்டேன்.
நடிகர் அர்ஜூன்
அர்ஜூன் சர்ஜா (நடிகர் அர்ஜூன்) நடித்த இரு மொழிப் படத்தில் நான் நாயகியாக நடித்தேன். இவருடைய படங்களைப் பார்த்துத்தான் நான் வளர்ந்தேன். இவருடன் நடிப்பதை நினைத்து மிகுந்த சந்தோஷப்பட்டேன். சில நாட்கள் இயல்பாகப் போனது. அவருடைய மனைவியாக இப்படத்தில் நான் நடித்தேன்.
ரொமான்ஸில் அத்துமீறல்
எங்களுக்கு இடையே ரொமான்ஸ் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் காட்சிகளில் நடிக்கும்போது இருவரும் கட்டிப்பிடித்துக் கொள்ளும்படி காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தக் காட்சிகளுக்குரிய ஒத்திகையின்போது அர்ஜூன் என்னைக் கட்டிப்பிடித்தார். அப்போது தேவையில்லாமல் என்னை இறுக்கி அணைத்தார். என்னை நெருக்கமாக நிறுத்திக் கொண்டார். எனது முதுகில் கையை வைத்து மேலும் கீழுமாக தடவினார்.
முன் விளையாட்டு காட்சிகள்
இருவருக்கும் இடையே முன் விளையாட்டு (Foreplay) காட்சிகள் வைக்கலாமே என்றும் இயக்குநரிடம் அவர் சிரித்தபடி கூறினார். இதைக் கேட்டு எனக்கு எரிச்சலானது. என் உடலை என் அனுமதியில்லாமல் வருடியதை வெறுத்தேன். அவர் பேசியதை வெறுத்தேன். ஆனால் அவரிடம் என்னால் எனது கோபத்தைக் காட்ட முடியவில்லை. இதற்காக உள்ளுக்குள் நான் வெந்து போனேன். அவரது செயல்கள் அனைத்துமே அவரது மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்தன.
இப்படி யாரும் நடந்ததில்லை
நான் பலருடன் நடித்துள்ளேன். யாரும் என்னிடம் இதுபோல நடந்ததில்லை. ஒத்திகையின்போதும் சரி, கேமரா ஆனில் இருக்கும்போதும் சரி. யாரும் அத்துமீறியதில்லை. ஆனால் அர்ஜூன் எல்லை மீறி நடந்து கொண்டார். அர்ஜூன் செயலால் நான் கடுப்பானதை இயக்குநரும் புரிந்து கொண்டார். எனக்கு நடந்ததை எனது மேக்கப் டீமிடமும் உடனே போய்க் கூறினேன்.
பட்டப் பகலில்
இந்த சம்பவம் வெட்ட வெளிச்சத்தில் நடந்தது. 50க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர். அவரிடமிருந்து விலகியிருக்க முடிவு செய்தேன். அதேசமயம், அவருக்குப் பயந்து ஓட நான் விரும்பவில்லை. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நல்லபடியாக முடித்துக் கொடுத்தேன். ஆனால் அவரும் தனது சேட்டைகளை நிறுத்தவில்லை. தொடர்ந்தபடிதான் இருந்தார். என்னால் படத் தயாரிப்பு நின்று போகக் கூடாது என்று விரும்பினேன். இதனால் முடிந்தவரை அமைதி காத்தேன். படம் முடியும் வரை காத்திருந்தேன்.
இனியும் இது போல நடக்கக் கூடாது
இனியும் இதுபோல நடக்கக் கூடாது. நாம் பெண்களை மேலும் உறுதியானவர்களாக மாற்ற வேண்டும். இதற்காகத்தான் நான் முன்வந்து இதைச் சொல்லியுள்ளேன். எல்லோரும் இதுபோல வெளிப்படையாக அம்பலப்படுத்த முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ஸ்ருதி ஹரிஹரன்.