ஆலுமா, டோலுமாவா பாடுறீங்க.. ஸ்பீக்கர்களை உதைத்து தள்ளிய கன்னட அமைப்பினர்.. பெங்களூரில் பரபரப்பு
பெங்களூர்: பெங்களூரில் இசைக்கச்சேரியில், தமிழ் திரைப்பட பாடல் பாடப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, ஒலிபெருக்கிகள் அடித்து நொறுக்கப்பட்டு, தமிழர்கள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் தமிழர்களுக்கு எதிராக கன்னட அமைப்பினர் சிலர் எப்போதுமே காழ்ப்புணர்ச்சியை காட்டி வருவது வழக்கம்.
எந்த தமிழரின் நிறுவனத்திலாவது, அல்லது வீட்டிலாவது தமிழ் எழுத்துக்கள் வெளியே எழுதப்பட்டிருந்தால், அதைக்கூட தார் பூசி அளித்து கலாட்டாவில் ஈடுபடும் அளவுக்கு கன்னட அமைப்புகள் அங்கு பெரும் கெடுபிடி காட்டி வருகின்றன.
தமிழ் பாடல்
இருப்பினும் சமீப காலமாக தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதிகளில், நடைபெறும் விழாக்களில் தமிழ் பாடல்கள் இசைக்கப்படுவது உள்ளிட்ட நிகழ்வுகள் ஓரளவுக்கு நடைபெற ஆரம்பித்தன. இப்போது மீண்டும், அதற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ் பாடல்களுக்கு எதிராக ஒரு பெரும் போராட்டம் பெங்களூரில் நடைபெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவில் விழா
பெங்களூரு நகரின் ஜேஜே நகர் பகுதியில் உள்ளது மார்க்கண்டேஸ்வரர் நகர். இங்கு கங்கம்மாதேவி உற்சவம், தமிழ் குடியிருப்புவாசிகளால் இணைந்து நடத்தப்பட்டது. இதையொட்டி கடந்த 17ஆம் தேதி இரவு இசைக்கச்சேரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இசை கச்சேரிக்கு காவல்துறையிடம் இருந்தும் உரிய அனுமதி பெறப்பட்டு இருந்தது.
கும்பல்
இந்த இசை கச்சேரியின்போது பெரும்பாலும் தமிழ் திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் உள்ள கன்னடர்கள் சிலர் கோபம் அடைந்தனர். கர்நாடகா ரக்ஷன வேதிகே என்ற கன்னட அமைப்புக்கு இது தொடர்பாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து சுமார், 10, 15 பேர் திபுதிபுவென அங்கு வந்து குவிந்தனர்.
அடி, உதை
வேதாளம் திரைப்படத்திலிருந்து ஆலுமா டோலுமா என்ற பாடல், இசை கச்சேரிகள் அப்போது பாடப்பட்டு கொண்டு இருந்தது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் உள்ளே வந்த கன்னட அமைப்பினர், பாடிக் கொண்டிருந்தவர் சட்டையை பிடித்து இழுத்து அடித்ததோடு, ஸ்பீக்கர்களை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளினர். இதை தட்டி கேட்ட தமிழர்கள் 4 பேர் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த ஜே ஜே நகர் காவல் துறையினர் கன்னட அமைப்பை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
ஹிந்திக்கு எதிராகவும்
காவல்துறை வழக்கு பதிவு செய்ததற்கு கர்நாடக மாநில அதிமுக இணைச் செயலாளர் குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். எடியூரப்பா அரசுக்கு அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதனிடையே பெங்களூர் இன்பான்டரி ரோடு பகுதியில் ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் திருமண மண்டபத்தில் ஹிந்தி மொழியில் எழுதப்பட்ட அலங்கார வளைவுகளை கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் கிழித்து எறிந்தனர். இதுதொடர்பான புகாரின்பேரில் கமர்சியல் ஸ்ட்ரீட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்னட அமைப்பை சேர்ந்த 6 பேரை கைது செய்து உள்ளனர்.