சங்கராந்தி நாளில் குமாரசாமிக்கு ஷாக்.. 2 சுயேட்சைகள் திடீர் ஆதரவு வாபஸ்.. ஆட்சி கவிழுமா?
அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றனர்.
Recommended Video
பெங்களூரு: குமாரசாமி அரசுக்கு கொடுத்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்களான நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் வாபஸ் பெற்றுள்ளனர். இது சம்பந்தமான கடிதம் ஒன்றினையும் ஆளுநருக்கு இவர்கள் இருவரும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
கர்நாடக சட்டசபைக்கு போன வருடம் மே மாதம் தேர்தல் நடைபெற்றது. மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 224 என்ற நிலையில், பாஜக 104 இடங்களை கைப்பற்றியது. மேலும் காங்கிரஸ் 82 இடங்களையும், ஜனதா தளம் (எஸ்) 38 இடங்களையும் கைப்பற்றின.
அதிக இடங்களை கைப்பற்றியிருந்தாலும் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பாவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத காரணத்தினால் பதவி விலகிவிட்டார். அதனால் அதற்கு அடுத்தபடியான இடங்களை கைப்பற்றின ஜனதா தளம் (எஸ்) மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டும் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தன. ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமிதான் முதல்வராக இருந்து வருகிறார்.
ஆபரேஷன் தாமரை
எப்படியாவது வரும் தேர்தலுக்கு முன் இப்போது இருக்கும் கூட்டணியை உடைத்துவிட்டு, பாஜக ஆட்சி கட்டிலில் அமர பக்காவாக பிளான் பண்ணி வருவதாகவும், அதற்காக காங்கிரஸ் தரப்பு எம்எல்ஏக்களை "ஆபரேஷன் லோட்டஸ்" என்ற பேரில் பேரம் பேசி இழுப்பதாகவும் இவ்விரு கூட்டணி கட்சிகளும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வருகின்றன.
காணவில்லை
இப்படி ஒரு குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என தெரிவதற்கு முன்பேயே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங், நாகேந்திரா ஆகியோர் காணவில்லை என்று அடுத்த பகீர் கிளப்பப்பட்டது. இதுவரை இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று உறுதியாக தெரியவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
நெருக்கடி மேல் நெருக்கடி
எம்எல்ஏக்களை காணவில்லை என்று ஒருபுறம் பீதி கிளம்ப, மற்றொரு புறம் 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுடன் நல்ல தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் 12 எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் எந்நேரமும் தாவலாம் என்று தகவல்கள் வந்துகொண்டிருப்பதால், ஆளும் கர்நாடக அரசுக்கு நெருக்கடி மேல் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
ஆட்சி கவிழுமா?
இந்தநிலையில், மாநில அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சங்கர் மற்றும் நாகேஷ் என்ற இரு சுயேட்சை எம்எல்ஏக்கள் இன்று வாபஸ் பெற்றுள்ளனர். இதற்கான கடிதத்தையும் இரு எம்எல்ஏக்களும் ஆளுநருக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இவர்கள் இருவரும் பாஜக பக்கம் போக போகிறார்களா என தெரியவில்லை.
ஆட்சி கவிழுமா?
பொதுவாக பெரும்பான்மையை பெற 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். இப்போது இந்த இரு சுயேட்சை எம்எல்ஏக்கள் விலகலால் குமாரசாமியின் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 117 ஆக குறைந்துவிட்டது. இதனால் ஆளும் அரசுக்கு ஆபத்து பெரிதாக இருக்காது என்றாலும் குமாரசாமிக்கு இது பெரிய ஷாக்தான்!!