சிறுத்தையின் கண்ணுக்கே மரண பயத்தை காட்டிய சிறுவன்.. மைசூரில் நடந்த செம்ம சம்பவம்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூரு அருகே புலி தன்னை தாக்கிய போது, சமயேசிதமாக செயல்பட்ட சிறுவன், திடீரென புலியின் கண்களில் விரலை விட்டு குத்தி நிலைகுலைய வைத்தார். இந்த தாக்குதலால் புலி அங்கிருந்து தப்பி ஓடி காட்டுக்குள் சென்று மறைந்தது.
கர்நாடக மாநிலம் மைசூரு அருகே கடகோலாவில் பீரஹோவதானஹண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் நந்தன் வயது 12.. நந்தனின் பெற்றோர் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் நந்தன் வசிக்கும் கிராமத்திற்குள் அடிக்கடி சிறுத்தை புலி வந்து அச்சுறுத்திவந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுவன் நந்தன் தன் வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு தீவனம் வைத்து கொண்டிருந்தான்.
அதிர்ச்சியில் தந்தை
அப்போது, அந்த பகுதியில் திடீரென்று சிறுத்தைபுலி ஒன்று வந்துள்ளது. தீவனம் வைத்துக் கொண்டிருந்த சிறுவன் நந்தன் மீது திடீரென பாய்ந்து தாக்க முயற்சித்துள்ளது. இதை கண்டு சிறுவனின் தந்தை ரவியும் செய்வதறியாது திகைத்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
தப்பியது சிறுத்தை
ஆனால், சிறுத்தை புலி தன்னை தாக்கிய போதும், தைரியத்தை இழக்காத நந்தன் சமயேசிதமாக செயல்பட்டு, புலியிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்துள்ளான் திடீரென சிறுத்தையின் கண்களின் தன் விரல்களை விட்டு ஆட்டியுள்ளார். இந்த திடீர் அட்டாக்கை சற்றும் எதிர்பார்க்காத சிறுத்தைப்புலி சிறுவன் நந்தனை விட்டு விட்டு காட்டுக்கு ஓடி மறைந்தது.
கிராம மக்கள் பாராட்டு
சிறுத்தை தாக்குதலில் தோள்பட்டை, கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டதால், சிறுவனை நந்தனை மைசூருவிலுள்ள ஜேஎஸ்எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிறுத்தையின் கண்ணை குத்தி தப்பித்த சிறுவனின் சமயோசிதத்தை எண்ணி கிராம மக்கள் வியப்புடன் பாராட்டி வருகிறார்கள்.
வன அதிகாரி பேட்டி
இது குறித்து மண்டல வனத்துறை அதிகாரி கிரிஷ் கூறும் போது, '' பொதுவாக மனிதர்களை சிறுத்தைகள் தாக்குவது இல்லை, முதல் முறையாக சிறுவனை தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சொல்கிறார்கள். சிறுவன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. , சிறுவன் சிறுத்தை புலியின் கண்களில் விரலை விட்டு குத்தியது உண்மையா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. விசாரித்து வருகிறோம்' என்றார்.
சிறுத்தைகள் வருகின்றன
இதனிடையே பீரெகவுடனஹுண்டி கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சிறுத்தைகளால் அடிக்கடி வருகின்றன. மேலும் அங்கு கர்நாடகா மாநில மின்சார விநியோகக் கழகத்திற்கு (சி.இ.எஸ்.சி) சொந்தமான ஒரு பெரிய காலி இடம் உள்ளது, அந்த இடத்தை சுத்தம் செய்யவதை பற்றி அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. இந்த இடத்தில் வளர்ந்துள்ள அடர்த்தியான புதர்கள் சிறுத்தைகளுக்கு தஞ்சம் புகுந்த இடமாக மாறிவிட்டதாக கிராமவாசிகள் புகார் தெரிவித்தனர்.