கர்நாடகாவில் கன்னடர்களுக்கு...வேலை வாய்ப்பில் முன்னுரிமை...விரைவில் உத்தரவு!!
பெங்களூரு: கர்நாடகாவில் கன்னடர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் முன்னிரிமை வழங்க வேண்டும் என்று அந்த மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. விரைவில் இதுதொடர்பான உத்தரவை பிறப்பிக்க இருக்கிறது.
இதுகுறித்து மாநில சட்டத்துறை அமைச்சர் ஜெசி மதுசுவாமி கூறுகையில், ''விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த உத்தரவு அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் மாடலை கர்நாடகாவும் பின்பற்றும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
சி அண்ட் டி துறையின் கீழ் மெக்கானிக், கிளார்க், அக்கவுண்ட்ஸ், சூப்பர் வைசர்கள், பியூன், ஹெல்பர்கள் இடம் பெறுவர். ஏ அண்ட் பி துறைகளின் கீழ் மேலாளர் அளவில் பணியாற்றுபவர்கள் இடம் பெறுவார்கள். இந்தத் துறைகளில் கண்டிப்பாக கன்னடகர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்றைய கவுன்சில் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்சி பசவராஜ் ஹோரட்டி கேள்வி எழுப்பி இருந்தார். மற்ற மாநிலங்களில் அந்தந்த மொழி பேசுபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், கர்நாடகாவில் என்ன நிலைமை என்பதை விளக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். மற்ற மாநிலங்களில் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க உத்தரவிட்டுள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் கர்நாடகா தொழிற்சாலை வேலை வாய்ப்பு சட்டத்தின் கீழ் தனியார் தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டு இருந்தது.
இந்த அரசாணையின்படி, கர்நாடகாவில் 15 ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்து, கன்னடம் படிக்க, எழுதத் தெரிந்தவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கிளார்க் மற்றும் மெக்கானிக் போன்ற வேலைகளை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இவர்கள் அரசு வேலைக்கும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் இந்த அரசாணையை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை கட்டாயப்படுத்த அரசுக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்து இருந்தது.