கர்நாடகா இடைத்தேர்தல்: திரிசங்கு நிலையில் தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள்.. திசையெல்லாம் எதிர்ப்பு!
Recommended Video
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல்களில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தங்களது கதி என்னவென்று தெரியாமல் விழிபிதுங்கி போயுள்ளனர்.
கர்நாடகாவில் முதல்வராக இருந்த குமாரசாமி அரசுக்கு எதிராக 17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இவர்களில் 14 பேர் காங்கிரஸ்; 3 பேர் ஜேடிஎஸ். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
இந்த 17 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வதாக அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார். மேலும் நடப்பு சட்டசபை காலம் முடியும்வரை 17 எம்.எல்.ஏக்களும் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் உத்தரவு பிறப்பித்தார் சபாநாயகர் ரமேஷ்குமார்.
இதனை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
இந்நிலையில் இடைத்தேர்தலில் தங்களையும் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இம்மனு மீதான விசாரணையின் போது, தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிடுவதை யாரும் தடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மனுத் தாக்கல் செய்தது. இம்மனுக்கள் மீது இன்றும் விசாரணை நடைபெற உள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்கப்படுமா?
இதனிடையே கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வேட்புமனுக்களை யாரும் தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதை யாரும் தடுக்க முடியாது. அந்த வேட்புமனுக்கள் ஏற்கப்படுமா? இல்லையா? என்பதை மனுக்களை பரிசீலனை செய்யும் அதிகாரிதான் முடிவு செய்வார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிட முடியும் என உச்சநீதிமன்றத்தில்தான் தேர்தல் ஆணையம் மனுத் தாக்கல் செய்துள்ளது. இதனை பத்திரிகைகளில் மூலம் நாங்களும் தெரிந்து கொண்டோம். இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு வேட்புமனுக்களை அதிகாரிகள் பரிசீலனை செய்வார்கள் என்றார்.
சீட்தர எதிர்ப்பு
இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு தரக்கூடாது என பாஜகவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஹொசகோட்டே தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோற்ற சரத் பச்சேகவுடா இம்முறை போட்டியிட வாய்ப்பு கேட்டிருக்கிறார். மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான எம்.டி.பி. நாகராஜூக்கு போட்டியிட வாய்ப்பு தரக் கூடாது எனவும் அவர் போர்க்கொடி தூக்கியிருக்கிறார். இது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா வீட்டை தமது ஆதரவாளர்களுடன் பச்சே கவுடா முற்றுகையிட்டார்.
சுயேச்சையாக களமிறங்குவோம்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாகராஜூவை எம்.எல்.சி.யாக்கி அமைச்சராக்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை; ஆனால் அவருக்கு எம்.எல்.ஏ.சீட் மட்டும் தரவே கூடாது என அடம்பிடிக்கின்றனர் பச்சேகவுடா ஆதரவாளர்கள். தங்களது எதிர்ப்பையும் மீறி நாகராஜூக்கு வாய்ப்பு தரப்பட்டால் சுயேச்சையாக பச்சேகவுடாவை நிறுத்துவோம் எனவும் பாஜகவுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்தலில் போட்டியிட முடியுமா? முடியாதா? என்கிற குழப்பம் ஒருபுறம்.. இன்னொருபுறம் நம்பிப் போன கட்சியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற அச்சம்.. இப்படி திரிசங்கு நிலையில் இருக்கின்றனர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள்.