கர்நாடகத்தில் சட்டசபை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு... தப்புமா எடியூரப்பா அரசு?
Recommended Video
பெங்களூர்: கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 66.25 சதவிதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் இந்த தேர்தல் முடிவுகள்தான் தற்போதைய முதல்வர் எடியூரப்பாவின் ஆட்சியின் ஆயுளை தீர்மானிக்க உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஏற்கெனவே மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைமையிலான ஆட்சி அரசு அமைந்தது. ஆனால் அதிகாரப்போட்டி,அமைச்சர் பதவியால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
இதனால் முதல்வர் குமாரசாமியின் ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழ்ந்தது. இதனிடையே 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பொறுப்பேற்றார்.
இன்று வாக்கு பதிவு
இந்த நிலையில் 17 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது.
இன்று தேர்தல்
17 தொகுதிகளில் மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகளில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இரு தொகுதிகளை தவிர்த்து 15 தொகுதிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெற்று முடிந்தது.
112 தேவை
இந்த 15 தொகுதிகளில் பாஜக சார்பில் 13 பேரும், இரு தொகுதிகளில் தகுதி நீக்க எம்எல்ஏக்களும் போட்டியிட்டனர். இந்த நிலையில் மொத்தம் 224 தொகுதிகளில் இரு தொகுதிகள் நீங்கலாக 222 சட்டசபை தொகுதிகள் தற்போது உள்ளன. இதில் பெரும்பான்மைக்கு 112 தேவைப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை
தற்போது பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்களின் (105 பாஜக+ஒரு சுயேச்சை) ஆதரவு உள்ளது. இன்று நடந்து முடிந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
மக்களின் மனங்களை வெல்வாரா எடி?
இந்த தேர்தலில் 6 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பாவின் அரசு தப்பும் என கருதப்படுகிறது. குமாரசாமி அரசை கவிழ்த்த எடியூரப்பாவின் அரசு தப்புமா என்பது இன்று வாக்களிக்கும் மக்களின் கை விரல்களில்தான் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.