கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது முழுமையான விவாதம் நடந்த பின்னரே வாக்கெடுப்பு நடத்த சபாநாயகரிடம் ஆளும் கூட்டணி கட்சியினர் கோரிக்கை விடுத்தனர் ஆளும் கூட்டணி அரசின் கோரிக்கைக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விவாதம் நடைபெற்றது.
அப்போது, கர்நாடக சட்டசபையை ஒத்திவைக்கக் கோரி காங்கிரஸ், ம.ஜனதா தள உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து குரல் எழுப்பியதால் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, திங்கட்கிழமை காலை 11 மணிக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்திவைத்தார்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 16 எம்.எல்.ஏ.க் கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் மாநிலத்தில் அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. சபாநாயகர் அறிவித்தபடி கர்நாடக சட்டசபை நேற்று(ஜூலை 18) பகல் 11:15 மணிக்கு கூடியது.
தன் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்தார். நேற்றே ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என பா.ஜ.,வினர் வலியுறுத்தினர். இதனை ஏற்க ஆளும் தரப்பு மறுத்துவிட்டது. இதனையடுத்து பா.ஜ., சார்பில், ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து மனு அளித்தனர்.
தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்
ஆளுநரும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், அந்த கெடுவுக்குள் ஓட்டெடுப்பு நடக்கவில்லை.
இதனையடுத்து, இன்று மாலை 6 மணிக்குள் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் வஜூபாலா , மீண்டும் மற்றொரு கடிதத்தை அனுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. ஆனால், 6 மணி காலக்கெடு முடிந்தும் இன்றும் நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், சட்டசபையை திங்கட்கிழமை காலை 11 மணிக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்திவைத்தார்.