கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா.. தேர்தல்தான் ஊழலின் பிறப்பிடம் என்று ஆவேசம்
Recommended Video
பெங்களூர்: கர்நாடகா சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் ரமேஷ் குமார். முன்னதாக தேர்தல் ஜனநாயகத்தில் நிலவும் ஊழல்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்ற நிலையில், பாஜகவின் எடியூரப்பா கடந்த வெள்ளிக்கிழமை முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து சட்டசபையில் இன்று அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். சபாநாயகர் ரமேஷ்குமார் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானத்தை விட்ட நிலையில், எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நிதி அமைச்சக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பிறகு சபாநாயகர் ரமேஷ்குமார் பேசியதாவது: என்னை ஒருமனதாக சபாநாயகராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் சாசனத்தின்படி, நான் எனது கடமையாற்றினேன். இந்த நாற்காலியில் அமர்ந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். எனது முடிவுகள், அறிவிப்புகள் இந்த நாற்காலிக்கான கவுரவத்திற்கு, குந்தகம் ஏற்படுத்தி இருக்காது என்று கருதுகிறேன்.
சோனியா காந்தி
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைந்ததும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் வேணுகோபால் ஆகியோர் நான்தான் சபாநாயகராக பதவி வகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். எனவே நான் அதற்கு ஒப்புக் கொண்டேன்.
ஒரு மனது
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக சார்பில், சுரேஷ்குமார் சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்டார். ஆனால் நான் போட்டியிடுவதாக அறிவித்ததும், பாஜக தனது முடிவை மாற்றிக் கொண்டு ஒரு மனதாக என்னை சபாநாயகராக தேர்ந்தெடுக்க உதவியது. அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மீடியாக்களுக்கு அட்வைஸ்
எனது கார் ஓட்டுனர் முதல், சபாநாயகரின் செயலாளர் வரை, என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மீடியாக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது கட்டாயம். தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கை தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம். ஏனெனில், இன்னமும் மானம், மரியாதைக்கு மதிப்பு கொடுத்து வாழும் மக்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான செய்திகளால் ஒரு உயிர் பறிபோனது, இனிமேலும் நடக்கக் கூடாது.
தேர்தல்
தேர்தல்கள்தான் இந்த நாட்டில் ஊழல்களின் ஊற்றுக்கண். தேர்தல் நடைமுறைகள் மாற்றங்களை ஏற்படுத்தாமல் ஊழலை ஒழிக்க முடியாது. மத்திய அரசை இது தொடர்பாக வலியுறுத்துவதை விட, கர்நாடக மாநில சட்டசபையில், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக விவாதித்து ஒரு தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.
ராஜினாமா
இவ்வாறு உரையாற்றிய சபாநாயகர் ரமேஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகரிடம் முறைப்படி வழங்கிவிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு கிளம்பிச் சென்றார். இதையடுத்து துணை சபாநாயகர் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் சபை கூடும் என்று அறிவித்தார். பாஜக அரசு அமைத்துள்ள நிலையில் அந்த கட்சி சார்பில் ஒருவரை சபாநாயகராக முன்மொழிந்து தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.