எடியூரப்பா முடிவுக்கு எதிராக திரளும் கன்னட அமைப்பினர்.. நாளை 'கர்நாடகா பந்த்'.. ஆட்டோ, டாக்சி ஓடாது
பெங்களூர்: கர்நாடகாவில், 'மராட்டிய மேம்பாட்டு ஆணையம்' அமைப்பதை கண்டித்து, கன்னட அமைப்பினர் நாளை பந்த் நடத்த அழைப்புவிடுத்துள்ளனர்.
இந்த பந்த்துக்கு ஆட்டோ ஓட்டுநர்கள், மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே பெங்களூர் உட்பட கர்நாடகா முழுக்க நாளை குப்பைகள் அள்ளப்படாது.
பெட்ரோல் பங்க்குகள், ஹோட்டல்கள் திறந்து இருக்கும். கார்மெண்ட்ஸ், ஐடி கம்பெனிகள் திறந்திருக்கும்.
அடிப்படை பணிகள்
வங்கி, அரசு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் திறந்து இருக்கும். ஆனால் கன்னட அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என்பதால், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பெங்களூரில் பாதுகாப்பு
பந்த் காரணமாக பெங்களூரில் இன்று நள்ளிரவு முதல் தீவிர பாதுகாப்பு அமல்படுத்தப்படும் என்று நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் தெரிவித்துள்ளார். பஸ் நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்டவற்றில் கூடுதலாக போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்படுவார்கள் என்று பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் தெரிவித்துள்ளார்.
பஸ்கள் இயங்கும்
பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்டவை இயங்காது என்று தெரிகிறது. இதனிடையே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பொதுமக்களுக்கு இடையூறு தரும் விதமாக பந்த் போராட்டங்களில் யாரும் ஈடுபட வேண்டாம், சமுதாயத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்வேன் என்று நான் உங்களுக்கு உறுதி வழங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் கன்னட அமைப்பினர் பந்த் நடத்தும் முடிவில் உறுதியாக இருக்கின்றனர்.
கன்னட அமைப்பு ஆவேசம்
கன்னட அமைப்புகளை ஒருங்கிணைக்கும், வாட்டாள் நாகராஜ் கூறுகையில், "வட மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக மகாராஷ்டிரா அரசு கூறுகிறது, எனவே அந்த பகுதிகளுக்கு மகாராஷ்டிரா உரிமை கொண்டாடுகிறது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு உள்ளது. இந்த மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் மராட்டிய மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது என்று மாநில அரசு கூறுகிறது. இப்படி கர்நாடக அரசே கூறுவது மகாராஷ்டிராவுக்கு சாதகமாக மாறும். உச்சநீதிமன்றத்தில் நம்மை தோற்கடிக்க இது அவர்களுக்கு ஒரு சுலபமான வழியாகும். எனவே எங்கள் போராட்டத்தை தடை செய்ய கர்நாடக அரசுக்கு உரிமையில்லை. இது கன்னடர்களின் கவுரவ பிரச்சினை" என்று தெரிவித்தார்.