விவசாயிகள் மாபெரும் போராட்டம்.. அதிரும் கர்நாடகா.. ஆடிப்போன எடியூரப்பா.. பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
பெங்களூர்: விவசாய சட்ட மசோதாவுக்கு எதிராக கர்நாடகாவில் இன்று பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூர் உட்பட பல்வேறு நகரங்களில் லாரிகளில் சாரை சாரையைாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண்துறை சார்ந்த மூன்று சட்டங்கள், கர்நாடக பாஜக அரசு பிறப்பித்துள்ள விவசாயத் துறை சார்ந்த அவசர சட்டம் ஆகிவற்றுக்கு எதிராக கர்நாடகாவில் இன்று விவசாய அமைப்புகள் இணைந்து பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்க அரசு மறுத்துவிட்டது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களால் கேஎஸ்ஆர்டிசி அமைப்பு 1200 பேருந்துகள் இயக்கத்தை இன்று ரத்து செய்தது.
பிற பகுதிகளில் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கினாலும், மக்கள் கூட்டம் இல்லாமல் பஸ்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஒன்று புரிகிறது.. எடப்பாடியாரும், ஸ்டாலினும் இதில் ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள்.. கடும் போட்டி!
பெங்களூர் நிலவரம்
பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில், குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டன. பெங்களூர் மைசூர் வங்கி சர்க்கிள் மற்றும் டவுன்ஹால் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், ஆம் ஆத்மி கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலில் விழுந்த விவசாயி
பெல்காம் நகரத்தில் விவசாயிகளின் போராட்டத்தை மீறி அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் மனமுடைந்து விவசாயி ஒருவர் போக்குவரத்து அதிகாரியின் கால்களை தொட்டு கும்பிட்டு விவசாயிகளுக்கு ஆதரவு தாருங்கள் என்று கோரிக்கை விடுத்த புகைப்படம் வைரலாக சுற்றி வந்து பார்ப்போரை நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
கட்சிகள் ஆதரவு
விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மக்களின் குரலாக காங்கிரஸ் இருக்கும் என்று அந்த மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
குலுங்கும் கர்நாடகா
ஜனநாயகத்திற்கு விரோதமாக எந்த அரசும் செயல்படக்கூடாது. மக்களின் நம்பிக்கையைப் பெற்று அரசு தனது பணிகளில் ஈடுபடலாம். மிரட்டி அச்சுறுத்தி எந்த சட்டத்தையும் கொண்டு வந்துவிட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பெங்களூர் மட்டுமில்லை, பாகல்கோட்டை, மங்களூர், பாகல்கோட்டை, மைசூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிர்ச்சியில் எடியூரப்பா
எதிர்க்கட்சியில் இருந்தபோது விவசாய தலைவர் என்று பெயர் பெற்றவர் எடியூரப்பா. மாநிலம் முழுக்க விவசாயிகளை சந்தித்து, விவசாயிகளுக்காக சட்டசபையில் குரல் எழுப்பி அரசுகளை அதிர வைத்தவர். ஆனால் இன்று, விவசாயிகளுக்கு எதிரானவர் என்ற பிம்பம் தன் மீது விழுவதாலும், விவசாயிகள் தீவிர போராட்டத்தை முன்னெடுப்பதாலும், அதிர்ச்சியில் உள்ளார் எடியூரப்பா. இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா, நான் திறந்த மனதோடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறேன். விவசாயிகள், என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன். விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன். இந்த சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று விளக்க தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.