தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் விமானங்களுக்கு தடை விதிக்கவில்லை.. கர்நாடகா அரசு புது விளக்கம்!
பெங்களூரு: கொரோனா பரவுவதைத் தடுக்க தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்கள், ரயில்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் கர்நாடகாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. எந்த மாநில ரயில் அல்லது விமானங்களுக்கு நாங்கள் தடை விதிக்கவில்லை என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.
கர்நாடகாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இ பாஸ் வைத்திருந்தவர்களைக் கூட கர்நாடகா அனுமதிக்கவில்லை.
தற்போது நாடு முழுவதும் விமானப் போக்குவரத்தும் தொடங்கி உள்ளது. விமான பயணிகளிடம் நடத்தப்படும் சோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதில் 46 பேர் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகா திரும்பியவர்கள்.
தொடர் பொய்கள்.. இந்தியாவிற்கு எதிராக "அதே ஸ்டைல்" பிளான்.. எல்லையில் சீனாவின் புது பித்தலாட்டம்!
மேலும் கர்நாடகாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,493 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் செயல்படுத்த கர்நாடகா இறங்கியுள்ளது.
இதன் ஒருபகுதியாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து விமானங்கள், ரயில்கள் மற்றும் வாகனங்கள் எதனையும் அனுமதிக்க முடியாது என கர்நாடகா தடை விதித்தாக செய்திகள் வந்தது.
இன்று மாலை இப்படி வெளியான செய்திக்கு அம்மாநில அரசு விளக்கம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது. எந்த மாநில ரயில் அல்லது விமானங்களுக்கு நாங்கள் தடை விதிக்கவில்லை என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. ரயில்கள் மற்றும் விமானங்களை குறைவாக இயக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்துள்ளோம். அதிகமாக வெளிமாநில பயணிகளை வந்தால் அவர்களை தனிமைப்படுத்த முடியவில்லை என்று அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.