காங். பதிலடி.. கர்நாடகாவில் மலராத தாமரை.. ஏமாற்றத்தில் பெங்களூர் திரும்பும் பாஜக எம்எல்ஏக்கள்
பெங்களூர்: 6 நாள் ரெசார்ட் வாசத்திற்குப் பிறகு கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் இன்று பெங்களூர் திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின், கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை கலைத்துவிட்டு பாஜக ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திடீரென தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்களையும் விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
ரிசார்ட் அரசியல்
இதையடுத்து பாஜகவின் 104 எம்எல்ஏக்களும் ஹரியானா மாநிலத்தில் குருகிராம் உள்ள பகுதியில் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். காங்கிரசை உடைத்து மறுபடியும் ஆட்சியை பிடிக்கும் வரை தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.
4 பேர் மிஸ்சிங்
இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று அதன் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா தலைமையில் பெங்களூரில் நடைபெற்றது. இதில் 4 எம்எல்ஏக்கள் வருகை தரவில்லை. அதில் இரண்டு பேர், போன் மூலம் தாங்கள் வர முடியாததற்கு சித்தராமையாவிடம் காரணம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பதிலடி ரிசார்ட்
மேலும், இருவர் குறித்து தகவலே கிடையாது. எனவே அவர்கள் பாஜகவின் திட்டத்திற்கு உடன்பட்டு சென்றிருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து எஞ்சிய 76 எம்எல்ஏக்களை பெங்களூர் அருகே உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கவைத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
பாஜக எம்எல்ஏக்கள்
காங்கிரசுக்கு 76 எம்எல்ஏக்கள் பலம் இருப்பது தற்போது உறுதியாக தெரிந்து உள்ளது. 4 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆலோசனையில் பங்கேற்கவில்லை. எனவே இப்போதைக்கு ஆட்சியை கலைக்க முடியாது என்பதை அறிந்துகொண்டு, பாஜக எம்எல்ஏக்களை மீண்டும் கர்நாடகாவிற்கு வரச்சொல்லி தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் இன்று பெங்களூர் திரும்ப உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.