பாஜகவில் ஐக்கியமான தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தேர்தலில் களமிறக்கும் அமித் ஷா.. லிஸ்ட் வெளியானது!
கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களில் 16 பேர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் அதில் 13 பேர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களில் 16 பேர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் அதில் 13 பேர் இடைத்தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடுகிறார்கள்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியான நடவடிக்கைதான். ஆனால் சபாநாயகர் இதற்காக நீண்ட காலம் எடுத்தது தவறு.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிடலாம். அதற்கு தடை கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
போட்டியிடுகிறார்கள்
இந்த நிலையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 11 ஆம் தேதியில் இருந்து இதற்காக வேட்புமனு தாக்கல் செய்யலாம். இந்த 17 பேரும் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
இணைத்துள்ளனர்
காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இந்த 17 எம்எல்ஏக்களில் 16 பேர் தற்போது பாஜகவில் இணைந்து இருக்கிறார்கள். நேற்றுதான் தீர்ப்பு வந்தது. இந்த நிலையில் இன்று அவர்கள் எல்லோரும் பாஜகவிற்கு தாவி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
17 எம்எல்ஏக்கள்
ஆனாலும் 17 எம்எல்ஏக்களில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ரோஷன் பாய்க் மட்டும் இன்னும் பாஜகவிற்கு செல்லவில்லை. அவரை கட்சியில் எடுக்க பாஜக தலைமை யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் மீது ஐஎம்ஏ பொன்சி ஊழல் வழக்கு இருக்கிறது. அதனால் இவரை எடுக்க பாஜக யோசித்து வருகிறது.
இடைத்தேர்தல்
15 தொகுதிகளுக்கு நடக்க உள்ள இடைத்தேர்தலில் தற்போது பாஜக 13 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 13 முன்னாள் எம்எல்ஏக்களுக்கும் பாஜக தற்போது வாய்ப்பு வழங்கி உள்ளது. மகேஷ் குமதல்லி, ரமேஷ் ஜாரகிஹோலி, சிவராம் ஹெப்பார், பிசி பாட்டில், ஆனந்த் சிங், கே சுதாகர், கோபல்லையா, நாகராஜ், நாராயண கவுடா, விஸ்வநாத் ஆகிய 13 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு இடங்கள்
மீதம் இருக்கும் இரண்டு இடங்களுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கர்நாடக அரசியலில் தேர்தல் பரபரப்பு கூடி உள்ளது.