8 மணி நேரம் வேலை.. 5 மணி நேரம் படிப்பு.. யூபிஎஸ்சி பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்ற பஸ் கன்டக்டர்
பெங்களூர்: பெங்களூர் மாநகர பேருந்து கழகத்தில் பேருந்து நடத்துநராக இருக்கும் மது என்பவர் மத்திய அரசு தேர்வாணையம் நடத்திய பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பெங்களூர் மாநகர பேருந்து கழகத்தில் நடத்துநராக இருப்பவர் மது. இவருக்கு சிறு வயதிலிருந்தே ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. இவர் மாண்டியாவில் மாளவள்ளி என்ற சிறிய நகரை சேர்ந்தவர்.
19 வயதிலிருந்தே கன்டக்டராக பணியாற்றி வருகிறார். அவர் தனது இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை தொலைதூர கல்வி மூலம் முடித்தார்.
அறிவியல்
யுபிஎஸ்சி தேர்வில் 29 வயதில் கடந்த ஜூன் மாதம் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்த தேர்வை கன்னடத்தில் எழுதினார். இதையடுத்து பிரதான தேர்வை தயார் செய்ய தொடங்கினார். அவர் அரசியல் அறிவியல் பட்டதாரி என்பதால் விருப்பப் பாடமாக அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகளை தேர்வு செய்தார்.
சந்தோஷம்
இந்த பிரதான தேர்வில் அவர் ஆங்கிலத்தில் எழுதினார். இந்த தேர்விலும் அவர் தேர்ச்சி பெற்றார். இதுகுறித்து மது கூறுகையில் எனது வீட்டில் நான்தான் முதல் பட்டதாரி. எனது பெற்றோருக்கு நான் என்னென்ன தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளேன் என்பது கூட தெரியாது. ஆனாலும் அவர்களுக்கு சந்தோஷம்தான்.
அறிவுறுத்தும் அதிகாரி
ஒரு நாளைக்கு 8 மணி நேரம் காக்கி உடை அணிந்து கொண்டு கன்டக்டர் பணியை செய்வேன். இதையடுத்து 5 மணிநேரம் தினந்தோறும் தேர்வுக்காக தயார் செய்வேன். பெங்களூர் மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து நிர்வாக இயக்குநர் ஷிக்கா எனக்கு எப்போதும் படிப்பதற்கான உதவிகளை செய்வார். தேர்வை எப்படி எழுத வேண்டும் என்பதையும் அறிவுறுத்துவார்.
நேர்காணல்
தற்போது நான் இரு நிலைகளை தேர்ச்சி பெற்றுவிட்டதால் கடைசி நிலையான நேர்காணல் தேர்வுக்காக அவர்தான் என்னை தயார் செய்கிறார். இந்த தேர்வு வரும் மார்ச் 25-ஆம் தேதி நடைபெறுகிறது. 2014-ஆம் ஆண்டு கர்நாடகா நிர்வாக சேவைகளுக்கான தேர்வில் நான் தோல்வி அடைந்தேன். இருந்தும் நான் என் தன்னம்பிக்கையை இழக்கவில்லை.
வீடியோக்கள்
இதைவிட மத்திய அரசு தேர்வாணையத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என எண்ண தூண்டியதே கர்நாடகாவில் நடந்த தேர்வுதான். இதனால்தான் 2018-இல் யுபிஎஸ்சி தேர்வில் என்னால் முதல் நிலையில் தேர்ச்சி பெற முடிந்தது. நான் எந்த கோச்சிங் கிளாஸிற்கும் செல்லவில்லை. நானாகவே எனது அலுவலக மூத்த அதிகாரிகளின் துணையோடு தயார் செய்து வருகிறேன்.
தேர்ச்சி பெறுவேன்
நேர்காணலை எப்படி சந்திப்பது என்பது குறித்து ஏராளமான யூடியூப் வீடியோக்களை பார்த்து வருகிறேன். நம்பிக்கையுடன் எப்படி கேள்விகளுக்கு விடையளிப்பது என்பது குறித்து கற்று வருகிறேன். நான் மிகவும் நேர்மறையான எண்ணம் கொண்டவன். என்னிடம் தன்னம்பிக்கை அதிகம் உள்ளது. எனவே நேர்காணலிலும் நிச்சயம் தேர்ச்சி பெறுவேன் என்றார்.