எடியூரப்பா அரசு தப்புமா.. வெற்றி யாருக்கு.. கர்நாடகாவில் நாளை வெளியாகிறது இடைத்தேர்தல் முடிவுகள்!
15 தொகுதி இடைத்தேர்தல் முடிவு நாளை வெளியாகிறது
பெங்களூரு: மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கர்நாடக சட்டப்பேரவையின் 15 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகின்றன. குறைந்த பட்சம் 6 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றால்தான் ஆட்சி நீடிக்கும் என்பதால், இந்த தேர்தல் முடிவு, நாடு முழுவதும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் கூடிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்க்க எவ்வளவோ முயற்சிகளை பாஜக மேற்கொண்டது.. இறுதியில், 17 பேர் மனதை மாற்றியதன் பலனாக கூட்டணி ஆட்சி கவிழ்ந்து எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு பதவியேற்றது.
இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.. கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் 17 பேரையும் தகுதிநீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிடவும், இந்த 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டை நாடினர்.. இவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோர்ட், தகுதி நீக்கம் செல்லும் என்றும், 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என்றும் தீர்ப்பில் தெரிவித்தது.
வாக்கு பதிவு
இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன. இந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் 68 சதவீத வாக்குகளும் பதிவாகின.. அதாவது பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர், ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி என்ற 2 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 15 தொகுதிகளுக்கும் இந்த இடைத்தேர்தல் நடந்தது.
வாக்கு எண்ணிக்கை
சிவாஜிநகர், கேஆர் புரம் உள்ளிட்ட 15 தொகுதிகளில் 13-ல் தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கியது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மஜத என்ற 3 பிரதான கட்சிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. ஒட்டுமொத்தமாக 165 வேட்பாளர்கள் இதில் போட்டியிட்டுள்ளனர்.. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை எண்ணப்படுகிறது. 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற உள்ளது.
பாதுகாப்பு
மாநிலம் முழுவதும் 11 மையங்களில் வாக்கு எண்ணப்படுகிறது. மின்னனு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் வாக்கு எண்ணிக்கை 12 மணிக்குள் மொத்தமாக தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கான எல்லா பணிகளையும் தேர்தல் ஆணையம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.. வாக்கு எண்ணும் மையங்களில் பூத்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
பாஜக ஆட்சி
இந்த இடைத்தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை, பாஜக ஆட்சியை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இம்மாநில சட்டசபையில் மொத்தம் 222 இடங்கள் உள்ளன. இப்போது எடியூரப்பா தலைமையிலான பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு 6 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. அதனால் இந்த இடைத்தேர்தலில் 6 முதல் 8 இடங்களில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதிலும் 8 இடங்களை வென்றுவிட்டால், பெரும்பான்மையை பலத்தை எளிதாக பெற்றுவிடும்.
எதிர்பார்ப்பு
15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக 8 முதல் 10 இடங்களில் வெற்றிப்பெறும் என்று தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகளும் சமீபத்தில் வெளிவந்தன. இதனால் பாஜக தலைவர்கள் ஏகப்பட்ட சந்தோஷத்தை அடைந்தனர். எனினும், நாளை வரப்போகும் தேர்தல் முடிவுகள்தான், எடியூரப்பா ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க இருப்பதால், கர்நாடக மாநிலமே பெரும் எதிர்ப்பார்ப்பில் காத்து கொண்டுள்ளது.