நவம்பர் 3ம் தேதி எடியூரப்பாவுக்கு அக்னி பரிட்சை.. காத்திருக்கும் தலைமை.. ரிசல்ட் முக்கியம் 'பிகிலே'
பெங்களூர்: நவம்பர் 3ம் தேதி தேதி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு, அக்னி பரிட்சை காத்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
ஆம்.. ஏனெனில் அன்றைய தினம்தான், பெங்களூரு நகருக்கு உட்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதி, மற்றும் அண்டை மாவட்டமான தும்கூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சிரா சட்டசபை தொகுதி ஆகியவற்றுக்கு இடைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் தற்போது பாஜகவின் பலம் 116 என்ற அளவுக்கு இருக்கிறது. எனவே இந்த இரு சட்டசபை தொகுதிகளில் தோற்றால் கூட பாஜக ஆட்சி கலையப் போவது கிடையாது. இருப்பினும், முதல்வர் எடியூரப்பாவுக்கு இந்த இரு இடைத் தேர்தல்களும் அக்னி பரிட்சை என்பது உண்மைதான்.
அங்கே 15தான்.. எங்க பக்கம் 100 எம்எல்ஏ.. எடியூரப்பா சிஎம் பதவி காலி.. கர்நாடக பாஜகவில் வெடித்த கலகம்
எடியூரப்பா பதவி
எப்படி என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது. நம்பர் 1: எடியூரப்பாவை மாற்றி விட்டு அந்த இடத்துக்கு வேறு ஒருவரை.. குறிப்பாக, வட கர்நாடக மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்பது பாஜக தலைமையின் திட்டமாக இருக்கிறது. எடியூரப்பாவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதால்தான் இந்த முடிவை பாஜக தலைமையில் அவசரப்பட்டு எடுக்க முடியவில்லை. ஒருவேளை சட்டசபை இடைத் தேர்தல்களில் பாஜக தோற்றால், இதையே காரணமாக வைத்து வேறு ஒருவரை பாஜக தலைமை, முதல்வராக்க முயற்சி செய்யக்கூடும்.
தெற்கு கர்நாடகா
இரு சட்டசபை தொகுதிகளுமே, தெற்கு கர்நாடகாவில் அமைந்தவை. பாஜகவுக்கு வடக்கு கர்நாடகா மாவட்டங்களில்தான் செல்வாக்கு இருக்கிறது. அந்த மாவட்டங்களில் இருந்து, நடப்பு சட்டசபையில், சுமார் 100 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தென் கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு, பாஜகவை விட செல்வாக்கு அதிகம். ஆனால், எடியூரப்பா வட கர்நாடக தொகுதிகளுக்கு எதையும் செய்வது கிடையாது என்ற குற்றச்சாட்டு அந்தக் கட்சிக்குள் இருந்து கிளம்பி வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தெற்கு கர்நாடகாவில் உள்ள இந்த இரு தொகுதிகளிலும் நடைபெறும், இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது எடியூரப்பாவுக்கு முக்கியமானது.
ஊழல் குற்றச்சாட்டுகள்
இன்னொரு பக்கம் பெரிய தலைவலியாக மாறியுள்ளது எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டுகள். ஆட்சி நிர்வாகத்தில் எடியூரப்பாவின் மகன் தலையீடு இருப்பதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகளை மக்கள் மதிக்கிறார்களா, அல்லது இல்லையா என்பதை கணக்கீடு செய்வதற்கு இந்த இடைத்தேர்தலை பாஜக மேலிடம் பயன்படுத்தும். எடியூரப்பா குடும்ப உறுப்பினர் மீது ஊழல் புகார் கூறி செய்தி ஒளிபரப்பிய கன்னட சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமையாளர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த பரபரப்புக்கு இடையேத்தான் தேர்தல் நடைபெற உள்ளதால், மக்களிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் எடியூரப்பா.
அக்னி பரிட்சை
நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெல்லப் போகிறார்கள் என்பது டொனால்டு டிரம்ப் அரசியல் எதிர்காலத்தை எப்படி நடத்தப் போகிறதோ அதே போலத்தான் இங்கும் எடியூரப்பாவின் அரசியல் எதிர்காலத்தை தேர்தல் முடிவு எடுக்கப் போகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
கட்சி தாவல்
ராஜராஜேஸ்வரி நகரில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற முனிரத்தினா நாயுடு, என்பவர் கடந்த வருடம் ஜூலையில் கட்சி தாவி பாஜகவில் சேர்ந்தார். எனவே அங்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சிரா தொகுதியில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சத்யநாராயணா என்பவர் வெற்றி பெற்ற நிலையில், அவர் மரணமடைந்தார். எனவே அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும், பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகள் போட்டியிடுகின்றன. எதிர்க் கட்சிகளின் வாக்குகள் இரண்டாக பிரியும் என்பது ஆளும் கட்சிக்கு பலம் என்று பார்க்கப்படுகிறது. உள்குத்து மற்றும் எடியூரப்பா மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு போன்றவை பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.