கர்நாடகா இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் இன்னொரு கமலா ஆபரேஷனுக்கு பாஜக முயற்சி: காங். தாக்கு
Recommended Video
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்கிற பயத்தால் எம்.எல்.ஏக்களை வளைக்கும் இன்னொரு கமலா ஆபரேஷனுக்கு பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
தினேஷ் குண்டுராவ் இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு தேவையான இடங்கள் கிடைக்காது என்பது கருத்து கணிப்புகளின் முடிவுகள். ஆகையால் எம்.எல்.ஏக்களை குறிவைத்து இன்னொரு ஆபரேஷனை நடத்துவதற்கு பாஜக முயற்சிக்கிறது.
அப்படி ஒரு முயற்சியை பாஜக மேற்கொண்டால் மக்கள் இதை சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இதையும் மீறி எம்.எல்.ஏக்களை குறிவைத்து இன்னொரு ஆபரேஷனை பாஜக நடத்தினால் அதற்கான எதிர்வினைகளை மிக மோசமான அளவில் அக்கட்சி எதிர்கொள்ள நேரிடும்.
பாஜகவினர் இன்று வீடு வீடாக பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால் வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு மக்கள் பாடம் கற்பிக்கத்தான் விரும்புகின்றனர். பாஜகவின் நடவடிக்கைகளுக்கு கர்நாடகா மக்கள் நிச்சயம் நல்ல பாடம் புகட்டுவர் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஜனநாயகக் கட்டமைப்புகளை பாஜக சிதைத்து வருகிறது.
கர்நாடகத்தில் நாளை சட்டசபை இடைத்தேர்தல்.. எடியூரப்பாவின் ஆட்சி தப்புமா?
தற்போது 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு வருகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்போம். இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.
கர்நாடகாவின் 15 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நாளை பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 9-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.