கர்நாடகா: 11 தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுமா காங்.? ஒக்கலிகா வாக்குகளை அறுவடை செய்யுமா?
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பாஜக, ஜேடிஎஸ்ஸைவிட காங்கிரஸ் கட்சிக்குத்தான் அக்னி பரீட்சையாக இருக்கப் போகிறது. ஆளும் பாஜகவுக்கு எதிராக வரிந்து கட்டி நிற்கும் ஒக்கலிகா சமூக வாக்குகளை அப்படியே அறுவடை செய்யுமா காங்கிரஸ்? என்பது பெரும் எதிர்பார்ப்பு.
காங்கிரஸ் கட்சியின் 11 எம்.எல்.ஏக்கள் உட்பட 15 பேர் முதல்வராக இருந்த குமாரசாமிக்கு எதிராக ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
குமாரசாமி அரசை காப்பாற்ற போராடிய முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சிவக்குமார் இப்போது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
அன்று எடப்பாடி.. இன்று எடியூரப்பா... ஆட்சியை தக்க வைக்க கை கொடுக்குமா இடைத்தேர்தல்கள்?
ஜேடிஎஸ்-காங்.-பாஜக போட்டி
இந்த இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. 15 தொகுதிகளிலுமே தனித்தே போட்டியிடுவதாக ஜேடிஎஸ் அறிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் ஏற்கனவே இத்தொகுதிகளில் தனித்தே தேர்தல் பணிகளை தொடங்கியிருக்கிறது.
சிறையில் சிவக்குமார்
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வெற்றிகளில் பெரும் பங்கு வகித்த சிவக்குமார் இப்போது களத்தில் இல்லை. அதனால் சித்தராமையா, பரமேஸ்வர், குண்டுராவ் போன்றோர் தங்களது ஆளுமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ஒக்கலிகா சமூகத்தின் கோபம்
தற்போது தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 11 இடங்கள் காங்கிரஸ் வென்றவை. ஆகையால் இந்த தொகுதிகளில் வெல்ல வேண்டிய கடும் நெருக்கடியில் இருக்கிறது காங்கிரஸ். குமாரசாமி அரசு கவிழ்ப்பு, சிவக்குமார் கைது, காஃபிடே சித்தார்த்தா தற்கொலை ஆகியவற்றால் பாஜக மீது கர்நாடகாவின் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான ஒக்கலிகா சமூகம் கடும் கொந்தளிப்பில் இருக்கிறது.
மிரட்டிய பெங்களூரு பேரணி
அண்மையில் பெங்களூருவில் சிவக்குமாருக்கு ஆதரவாக மிக பிரமாண்ட பேரணியை நடத்திய ஒக்கலிகா சங்கத்தினர் பாஜகவுக்கு அரசியல் ரீதியாக பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்தனர். தற்போது தேர்தல் நடைபெறும் இடங்களில் 6 தொகுதிகள் ஒக்கலிகா சமூகத்தினர் பெரும்பான்மையினராக உள்ள இடங்கள். பாஜகவுக்கு எதிரான ஒக்கலிகா சமூக வாக்குகளை அப்படியே காங்கிரஸ் அள்ளுமா? அல்லது குறுக்குசால் ஓட்டும் ஜேடிஎஸ் கட்சியால் வெற்றியை கோட்டை விடுமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.