கர்நாடகாவில் டிச.5ம் தேதி, 15 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்.. தப்புமா எடியூரப்பா அரசு?
பெங்களூர்: ஏற்கனவே அறிவித்தபடி கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் டிசம்பர் 5 ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான, மாதிரி நடத்தை விதிமுறைகள், நாளை, திங்கள்கிழமை முதல், தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகள் அடங்கிய, மாவட்டங்களில், நடைமுறைக்கு வரும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் தலைவிதி நவம்பர் 13 ம் தேதி முடிவு செய்யப்பட உள்ளது. ஏனெனில் அன்றுதான் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தனது தீர்ப்பை வழங்க உள்ளதாக, நேற்று அறிவித்தது.
Sanjeev Kumar, Chief Electoral Officer of Karnataka: Voting to take place on 5 December & counting of votes on 9 December for by-elections to 15 Karnataka Assembly Constituencies. Model Code of Conduct comes into effect from 11 November. pic.twitter.com/xkJY0Os5ws
— ANI (@ANI) November 10, 2019
17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அதில் 15 தொகுதிகளுக்குத்தான் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. மஸ்கி மற்றும் பெங்களூரிலுள்ள ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. வேறு ஒரு வழக்கு இதற்கு காரணமாகும்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சியே, கவிழும் வகையில் அடுத்தடுத்து 17 ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் கூட்டணி அரசு கலைந்தது. இதுதொடர்பாக ஆளுங்கட்சியினர் அளித்த புகாரை பரிசீலித்த, அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார், ராஜினாமா செய்த 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த சட்டசபையின் பதவி காலம் இருக்கும் வரை அவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என்றும் உத்தரவிட்டார். சபாநாயகர் உத்தரவை எதிர்த்து 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் வரும் புதன்கிழமைதான் தீர்ப்பு வெளியாகிறது. அந்த தீர்ப்பை பொறுத்தே, தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், இடைத் தேர்தலில் போட்டியிட முடியுமா, இல்லையா என்பது தெரியவரும்.
மேலும் இடைத் தேர்தல் முடிவை வைத்துதான், எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு தப்புமா இல்லையா என்பதும் தெரியவரும். பெரும்பான்மை பலம் இல்லாமல் தகுதி நீக்கத்தால் உருவான சட்டசபை இடங்களை அடிப்படையாக கொண்டு ஆட்சி நடத்தி வருகிறது எடியூரப்பா அரசு. காலியாக உள்ள தொகுதிகள் முழுமை பெறும்போதுதான் உண்மையான பெரும்பான்மை எடியூரப்பா அரசுக்கு கிடைக்குமா என தெரியவரும்.