எம்எல்ஏ பதவி ராஜினாமா.. இப்போ பாஜக சார்பில் போட்டி.. கோபாலய்யா மீது மஜத கோபம்.. வீழ்த்த செம வியூகம்
Recommended Video
பெங்களூர்: பாஜகவுக்கு கட்சி தாவி, பெங்களூர் மகாலட்சுமி லேஅவுட், இடைத் தேர்தலில் களமிறங்கியுள்ள, தங்கள் மாஜி எம்எல்ஏவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று செம வியூகத்தை கையில் எடுத்துள்ளது தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி.
224 தொகுதிகளை கொண்ட, கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில், 105 தொகுதிகளை வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது.
எனவே ஆளுநர் அந்த கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார். இருப்பினும், எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
மோடியை காப்பாற்றியதே பால் தாக்கரேதான்.. மறக்க வேண்டாம்.. சிவசேனா கடுமையான விமர்சனம்!
கலைந்த குமாரசாமி அரசு
இதையடுத்து, காங்கிரஸ்-மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. குமாரசாமி முதல்வரானார். ஆனால், எப்படியாவது ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில், எடியூரப்பா அன்ட் கோ, தீவிரம் காட்டியது. இந்த நிலையில்தான், காங்கிரசை சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் மற்றும் மஜதவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கலைந்தது.
இடைத் தேர்தலில் போட்டி
இதையடுத்து, 17 பேரையும் தகுதி நீக்கம் செய்தார் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார். எடியூரப்பா தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. தகுதி நீக்கப்பட்ட 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தகுதி நீக்கம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெற உள்ள 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் இவர்கள் போட்டியிட தடையில்லை என்றும் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
16 எம்எல்ஏக்கள்
இந்த நிலையில், பெங்களூர், சிவாஜிநகரிலிருந்து காங்கிரஸ் எம்எல்ஏவாகியிருந்த ரோஷன் பெய்க் தவிர்த்து பிற 16 தகுதி நீக்க எம்எல்ஏக்களும் திடீரென பாஜகவில் இணைந்தனர். இதையடுத்து, இவர்களை ராஜினாமா செய்ய வைத்ததே பாஜகதான் என்ற தங்கள் குற்றச்சாட்டை, காங்கிரசும், மஜதவும் மறுபடியும், கூர்மைப்படுத்தியுள்ளன.
வீழ்த்த தீவிரம்
இந்த நிலையில், தங்கள் கட்சியில் இணைந்த பிற கட்சி மாஜி எம்எல்ஏக்களில் 13 பேருக்கு, அவர்கள் ஏற்கனவே தேர்வான அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் மற்றும் மஜதவை மேலும் கோபப்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான், தங்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்று போட்டியிடுவோரை வீழ்த்த காங்கிரசும், மஜதவும் கங்கணம் கட்டி களமிறங்கியுள்ளன.
மகாலட்சுமி லேஅவுட்
வடக்கு பெங்களூர் பகுதியிலுள்ளது மகாலட்சுமி லேஅவுட். ராஜாஜிநகர் மற்றும் யஷ்வந்தபுரா ஆகியவற்றுக்கு நடுவேயுள்ள இந்த தொகுதியில், ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத்துகள் கணிசமாக உள்ளனர். கடந்த பொதுத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில், கோபாலய்யா என்ற அப்பகுதி பிரமுகர் களமிறக்கப்பட்டார். இவர் ஒக்கலிகர் ஜாதி பிரிவை சேர்ந்தவர். இவர் தற்போது பாஜகவுக்கு சென்றுள்ளதால், இடைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.
ஒக்கலிகர்
கோபாலய்யாவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்பதற்காக ம.ஜ.த மாற்று வியூகத்தை கையில் எடுத்துள்ளது. ஒக்கலிகர்கள் கட்சி என்றே அறியப்படும் ம.ஜ.த, இத்தொகுதியில், எடியூரப்பா சார்ந்த லிங்காயத்து ஜாதிக்காரரான, கிரிஷ் கே.நாஷி என்பவரை, களமிறக்கியுள்ளது. ஏற்கனவே கோபாலய்யாவை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றிய ஒக்கலிகர் வாக்காளர்கள், இப்போது அவர் மீது கோபத்தில் இருக்கிறார்கள். எனவே, அந்த ஓட்டு எப்படியும், மஜதவுக்குதான் வரும். இதையடுத்து கணிசமாக உள்ள லிங்காயத்து ஓட்டுக்களை இழுக்க அந்த ஜாதியிலிருந்து ஒருவரை களமிறக்கிவிடலாம் என்பதுதான் மஜதவின் மாஸ்டர் வியூகம்.
வியூகமா, செல்வாக்கா
இப்படி ஒரு வேட்பாளரை களமிறக்கினால், லிங்காயத்து ஓட்டுக்கள்தான் சிதறுமே தவிர ஒக்கலிகர் ஓட்டு சிதறாது. முழுக்க நமக்கே கிடைக்கும் என்பது மஜத திட்டமாக உள்ளது. இந்த வியூகத்திற்கு பலன் கிடைக்குமா? அல்லது கோபாலய்யாவுக்கு தொகுதியில் உள்ள தனிப்பட்ட செல்வாக்கு, இந்த வியூகங்களை முறியடிக்குமா என்பது சுவாரசியமான எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.