நீண்ட இழுபறி முடிவுக்கு வந்தது.. 12-ம் தேதி விரிவாக்கம் செய்யப்படும் கர்நாடக அமைச்சரவை
பெங்களூரு: நீண்ட இழுபறிக்கு பிறகு வரும் 12-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் இந்த் கூட்டணி கர்நாடகத்தில் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து மத்தியிலும் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.
இதனையடுத்து கர்நாடகத்தில் ஆபரேஷன் தாமரையை செயல்படுத்த, பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதாவது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் வளைத்து, குமாரசாமியின் ஆட்சிய கவிழ்ப்பதேயே ஆபரேஷன் தாமரை என கூறப்படுகிறது.
இந்நிலையில் அதற்கேற்றவாறு மாநில அளவில் அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் சிலர், குமாரசாமி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். எனவே தனது ஆட்சியை தக்க வைக்க அமைச்சர் பதவியை எதிர்பார்க்கும் சில முக்கியஸ்தர்களுக்காக அமைச்சரவையை விரிவுப்படுத்த குமாரசாமி தீர்மானித்தார்.
இருப்பினும் புதிது புதிதாக எழுந்த சிக்கல்களால் அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது. இதனையடுத்து சமீபத்தில் டெல்லி சென்ற குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், சோனியாவையும் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் வரும் ஜூன் 12-ம் தேதி, கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவரும் 2 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 3 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
இதனிடையே கர்நாடக ஆளுநர் வாலாவை நேரில் சந்தித்து பேசிய மாநில முதல்வர் குமாரசாமி, வரும் 12ம் தேதி காலை 11.30 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்ய அனுமதி கேட்டு ஒப்புதல் பெற்றுள்ளார்.
முதல்வர் குமாரசாமியின் கோரிக்கைக்கு கர்நாடக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து வரும் 12-ம் தேதி புதன்கிழமையன்று ஆளுநர் மாளிகையில், அமைச்சரவை விரிவாக்க விழாவை எளிமையாக நடத்த ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தின் போது சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் நாகேஷ் மற்றும் சங்கர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். காங்கிரஸ் தரப்பில் ராமலிங்க ரெட்டி மாநில அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.