கலகத்தை குறைக்க கர்நாடகாவில் 2 சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி!
பெங்களூர்: கர்நாடகாவில் ஆபரேசன் தாமரை மூலம் ஏற்பட்டு வரும் கலகத்தை குறைக்க 2 சுயேச்சைகளுக்கு இன்று அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது
கர்நாடக சட்டபேரவை தேர்தலில் சிங்கிள் லார்ஜஸ்ட் கட்சியாக வெற்றிபெற்ற பாஜக ஆட்சியமைக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் உச்ச நீதிமன்ற தலையீட்டினை அடுத்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அடிப்படையில் ஆட்சி அமைத்தன.. ஆனால் இதை தாங்கி கொள்ள முடியாத பாஜக ஆபரேசன் தாமரை என்ற திட்டம் மூலமாக ஆட்சியை கவிழ்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதை காங்கிரசும் ம.ஜ.த.வும் வெற்றிகரமாக முறியடுத்து வருகிறது. இருந்தாலும் அமைச்சர் பதவி கிடைக்காத ரமேஷ் ஜார்கிஹோளி, ரோஷன் பெய்க், சுதாகர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். கர்நாடக ,முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா காங்கிரஸ் அரசுக்கு பல இடியாப்ப சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறார்.
மே.வங்கத்தில் வட இந்தியர்கள் வங்காள மொழிதான் பேச வேண்டும்: மமதா அதிரடி
குமாரசாமி அரசுக்கு ஆதரவளித்து வரும் சுயேச்சை எம்.எல்,ஏக்கள் மற்றும் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.எ.க்களை வளைத்து ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி கன ஜரூராக நடைபெற்று வந்த நிலையில் அதிருப்தியில் இருந்த இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏக்களுக்கு இன்று அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதற்காக கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. கர்நாடாகவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் பணியில் முதல்வர் குமாரசாமி இறங்கியுள்ளார். அதன்படி, மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடம் சுயேச்சை எம்எல்ஏவுக்கும், காங்கிரஸின் ஒரு இடம் மற்றொரு சுயேச்சைக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ராணிபென்னூர் ஆர்.சங்கர், முல்பாகல் நாகேஷ் ஆகிய இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பெங்களூரு ராஜ்பவனில், நடந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் அரசுக்கு ஏற்பட்டிருந்த ஆபத்து தற்காலிகமாக நீங்கியுள்ளது.