நாட்டில் எந்த முதல்வரும் இப்படி செய்ததில்லை.. 'ஸ்டார்' சர்ச்சையில் குமாரசாமி
Recommended Video
பெங்களூர்: நாட்டில் எந்த முதல்வரும் செய்யாத ஒரு செயலை, கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி, சத்தமின்றி செய்து வருகிறார். இதனால் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளார்.
அப்படி என்ன செய்தார் என்கிறீர்களா? ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர், அமைச்சர்களுக்கு அரசு சார்பில் பங்களாக்கள் வழங்கப்படும். அங்கே இருந்தபடி அரசு அலுவல்களை மேற்கொள்வார்கள். சில மாநிலங்களில், தங்களது சொந்த வீடுகளில் இருந்தபடியே, இந்த பணிகளை மேற்கொள்வார்கள்.
இதேபோலத்தான் கர்நாடக முதல்வருக்கும் பெங்களூரில் இரு வீடுகள் உள்ளன. ஒரு வீடு ஜேபி நகர் பகுதியில், ஜெயதேவா மருத்துவமனை அருகே உள்ளது. இது சொந்த வீடு. முதல்வர்களுக்காக அரசு சார்பில் வழங்கப்படும் பங்களா, குமாரகிருபா சாலையில், லலித் அசோக் என்ற நட்சத்திர ஹோட்டலின் அருகே அமைந்துள்ளது. இதற்கு பெயர் கிருஷ்ணா.
நட்சத்திர ஹோட்டல்
பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிவது, அரசு அதிகாரிகளுடன் மீட்டிங் நடத்துவது போன்றவற்றுக்கு, 'கிருஷ்ணா' இல்லம் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், இவ்விரண்டு இல்லங்களையும் விட்டுவிட்டு, குமாரசாமி, தினமும் எங்கே தங்குகிறார் தெரியுமா? ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள தாஜ் வெஸ்ட் என்ட் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில்.
ஆர்டிஐ கேள்வி
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்த தகவலை வெளிக்கொண்டு வந்துள்ளார் ஒரு ஆர்வலர். நட்சத்திர ஹோட்டலில் குமாரசாமி தங்குவது முதல்வரின் அலுவலகத்திற்கு தெரியுமா என்ற ஆர்டிஐ கேள்விக்கு, தெரியாது என பதில் கிடைத்துள்ளது. ஏனெனில், நட்சத்திர ஹோட்டல் பில்லை, முதல்வர் அலுவலகம் செலுத்துவது கிடையாதாம். இதை யார் செலுத்துகிறார்கள் என்பது இன்னும் மர்மமாக உள்ளது.
முக்கிய இடம்
தாஜ்வெஸ்ட் என்ட் ஹோட்டலுக்கும், கிருஷ்ணா இல்லத்திற்கும் மிஞ்சிப்போனால், 2 கி.மீ தூரம்தான் இருக்கும். ஆனாலும், முதல்வர் ஐந்து நட்சத்திர ஹோட்டலைத்தான் நாடுகிறார். இங்கிருந்து சட்டசபை கட்டிடம் அமைந்துள்ள தலைமைச் செயலகமான விதான சவுதா, 2 கி.மீ சுற்றளவுக்குள்தான் வருகிறது. மஜத அலுவலகம் கண்ணுக்கு எட்டிய தூரத்தில்தான் அமைந்துள்ளது என்பதும் தாஜ் வெஸ்ட் என்ட் ஹோட்டலை முதல்வர் தேர்ந்தெடுக்க காரணமாக கூறப்படுகிறது.
கிராம தரிசனம்
இதனிடையே, குமாரசாமி, தனது கிராம சுற்றுப் பயணத்தை விரைவில் துவங்க உள்ளார். கிராமங்களில் ஏழை எளிய மக்களிடம் குறைகளை கேட்டறிந்துவிட்டு, கிராமங்களிலேயே தங்கி, இரவு தூங்கி மறுநாள் பெங்களூர் திரும்பும் திட்டம் இது. மாதம் ஒரு நாள் இவ்வாறு கிராமங்களில் தங்க உள்ளார் குமாரசாமி. பெங்களூரில் நட்சத்திர ஹோட்டலில் தங்கும் குமாரசாமி, கிராமத்தில் தங்குவது நாடகம் என்று பாஜக விமர்சனத்தை முன் வைத்துள்ளது.