ஒருவழியாக தமிழகத்திற்கு தண்ணீர் தந்தது கர்நாடகா.. காவிரியிலிருந்து 855 கனஅடி நீர் திறப்பு
பெங்களூரு: காவிரியிலிருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. தற்போதையை நிலவரப்படி கபினி அணையிலிருந்து 500 கனஅடி தண்ணீரும், கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 355 கனஅடி தண்ணீரும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் குடகு பகுதியில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடும்படி தமிழகம் வலியுறுத்தியது.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் பீதியில் குமாரசாமி.. பேச்சே வரவில்லை!
தமிழகத்தின் வாதத்தை கேட்டாலும் மழை பெய்து கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, காவிரியிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என மேலாண்மை ஆணையம் கூறியது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரிலும், மாண்டியா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் காவிரியில் இருந்து விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என அண்மையில் கர்நாடக முதல்வர் கூறியிருந்தார்.
இந்நிலையில் கர்நாடகத்தின் காவிரி பிடிப்பு பகுதிகளில் கடந்த நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் குடகு பகுதியில் விரைவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது திறக்கப்பட்டுள்ள காவிரி நீர் பிலிக்குண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல்லுக்கு வந்தடையும்.
கர்நாடகத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்வதால் அம்மாநில அணைகளில் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அதிகரிக்கும்பட்சத்தில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும்.