கர்நாடகா முதல்வரின் வீட்டு அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா ...தனிமையில் எடியூரப்பா!!
பெங்களூரு: கர்நாடகா மாநில முதல்வரின் வீட்டு அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதை அடுத்து முதல்வர் எடியூரப்பா தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். வீட்டில் இருந்தே அலுவல்களை கவனிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு அவரது வீட்டில் தனி அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகம் கிருஷ்ணா என்று அழைக்கப்படுகிறது. இந்த அலுவலகம் கடந்த மாத இறுதியில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டது. அலுவலகம் முழுவதும் இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூலை 2ஆம் தேதி திறக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அப்போதுதான் முதல்வர் எடியூரப்பா அலுவலகம் வந்தார்.
இந்த நிலையில் இன்று அதே அலுவலகத்தில் இருக்கும் முதல்வரின் ஸ்பேர் டிரைவர், பைலட் ஸ்டாப் மற்றும் விதான் சவுதான் தலைமைச் செயலகத்தில் இருக்கும் ஊழியர் என்று பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து முதல்வர் வெளியிட்டு இருக்கும் பத்திரிகை குறிப்பில், ''நான் நலமாக இருக்கிறேன். பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எனது அதிகாரபூர்வ வீடான காவேரியில் இருந்து அலுவல்களை கவனிப்பது என்று முடிவு செய்து இருக்கிறேன். வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உத்தரவுகளை பிறப்பிப்பேன்.
நலமாக இருக்கிறேன்.. மக்கள் அச்சப்பட வேண்டாம்.. கர்நாடக முதல்வர் எடியூரப்பா கோரிக்கை
மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா தொற்றை விரட்டியடிக்க வேண்டும். மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வர் தனது அதிகாரபூர்வ இல்லத்திற்கு மாறுவதை அடுத்து உடனடியாக அவரது காவேரி இல்லத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் வெளியிட்டு இருக்கும் முதல்வரின் அரசியல் செயலாளர் ரேணுகாசார்யா வெளியிட்டு இருக்கும் செய்தியில், முதல்வர் நலமாக இருக்கிறார். தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை பெங்களூருவில் 1,373 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு இருந்தது. கர்நாடகா மாநிலத்தில் இதுவரை 31,105 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 486 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கர்நாடகாவில் புதிதாக 2,228 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.