ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு ஷிப்ட்! கர்நாடக முதல்வர் சொன்ன தகவல்
பெங்களூர்: நீலகிரியில் இந்திய விமான படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் அடிப்படையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்டோர் செல்வதற்காக டெல்லியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்றனர்.
விமான படை ஹெலிகாப்டர் விபத்து.. மோசமான வானிலையே காரணமா?.. நடந்தது என்ன?
கோவை மாவட்டம் சூலூர் சென்ற அவர்கள் அங்கிருந்து உயர் தொழில்நுட்பம் கொண்ட எம்ஐ ரக ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி காட்டுப் பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். மொத்தம் 14 பேர் சென்ற நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மரபணு பரிசோதனை
உயிரிழந்தவர்கள் யார் யார் என்பது குறித்து மரபணு பரிசோதனை மூலம் கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்தால் மேட்டுப்பாளையம்- குன்னூர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரி மார்க்கம்
உதகை செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி மார்க்கமாக மட்டுமே மாற்றி அனுப்பப்படுகின்றன. விபத்துக்குள்ளான அந்த இடம் அடர்ந்த வனப் பகுதியாகும். இங்கு மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது.
பிபின் ராவத்
இந்த நிலையில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதையடுத்து பிபின் ராவத்தின் வீட்டிற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார்.
தகவல்
இந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட ஒருவர் பிபின் ராவத் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த விமான படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது.
முதல் கட்ட தகவல்
விபத்து குறித்து மேலும் பல தகவல்களை பெற முயற்சித்து வருகிறேன். முதற்கட்ட தகவலின்படி பிபின் ராவத் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றார். இந்த நிலையில் அவரது மனைவியின் நிலை குறித்து தெரியவில்லை.