கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா... 8 மாதங்களில் இரண்டாவது முறையாக வைரஸ் பாதிப்பு
பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது மனிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்குக் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா நெகட்டிவ் என வந்தது.
இருப்பினும், இரண்டு நாட்களாக அவருக்குத் தொடர் காய்ச்சல் இருந்தது. இதன் காரணமாக அவர் பெங்களூரு ராமையா நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புதுவையில் கொரோனா அதிகரித்தால் பகுதி நேர ஊரடங்கு அமலாகும்: துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
மீண்டும் கொரோனா பாதிப்பு
இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் கொரோனா காரணமாக மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது மனிபால் மருத்துவமனைக்கு எடியூரப்பா மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்குச் சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. எடியூரப்பாவின் மகள் பத்மாவதிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டம்
முன்னதாக, கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து இன்று காலை அவர் சுகாதார துறை அமைச்சர் சுதாகர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும், கர்நாடாவில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கும் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். கடந்த சில தினங்களாகவே, அவருக்கு உடல் சோர்வும், காய்ச்சலும் இருந்ததாகக் கூறப்படுகிறது
இரண்டாம் முறை
78 வயதாகும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனாவால் பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டார். அப்போதும் அவர் மனிபால் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 2ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு எட்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், ஆகஸ்ட் 10ஆம் தேதி அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
கர்நாடகா கொரோனா பாதிப்பு
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு 14,738 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும், 66 பேர் கொரோனாவால் பலியாகினர். கொரோனாவைக் கட்டுப்படுத்த கர்நாடகாவிலுள்ள சில மாவட்டங்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.