க்ளைமேக்ஸ் நோக்கி கர்நாடக அரசியல் சிக்கல்.. நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் குமாரசாமி!
பெங்களூர்: நம்பிக்கை வாக்கெடுப்பு கோர அனுமதிக்குமாறு, கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிரடி கோரிக்கையை சட்டசபையில் இன்று முன்வைத்துள்ளார்.
ஆளும், காங்கிரஸ்-மஜத கூட்டணியிலிருந்து இதுவரை 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், முதல்வரின் இந்த கோரிக்கை எதிர்பாராத 'மூவ்' என பார்க்கப்படுகிறது. ராஜினாமாக்களை சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை என்றாலும்கூட, அவர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வருவது சந்தேகமே. அப்படியிருக்கும் சூழ்நிலையில், பெரும்பான்மை பலத்தை எப்படி குமாரசாமி நிரூபிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவே இதுபோன்ற ஒரு கோரிக்கையை முன்வைக்காத நிலையில், முதல்வர் தானாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நேரம் ஒதுக்குமாறு, இன்று சட்டசபையில் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்டாயம் பங்கேற்க வந்து அரசுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு, விப் உத்தரவை பிறப்பித்து அப்படி செய்யாத எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க அஸ்திரத்தை ஏவுவதே இதன் பின்னணியில் உள்ள திட்டமாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அல்லது பாஜக எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சியை தக்க வைக்கும் திட்டமாகவும் இருக்கும் என்கிறார்கள்.
ஆனால், ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்த நிலையில், விப் உத்தரவை மீறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நாங்கள் தலையிட கூடாதா? கை கட்டி கொள்ள வேண்டுமா.. கர்நாடக சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
இடியாப்ப சிக்கல் போல நிலைமை மாறியுள்ள நிலையில், குமாரசாமி இவ்வாறு ஒரு முடிவை எடுத்துள்ளது சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது. அனேகமாக வரும் திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சபாநாயகர் அனுமதிக்க கூடும் என தெரிகிறது. இதனால் கர்நாடக அரசியலில், பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.