அரசு ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதம் லீவு கிடையாது.. எடியூரப்பா தடாலடி.. பின்னணியில் எஸ்கேப் தந்திரம்
பெங்களூர்: அடுத்த 3 மாதங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை கூட வேலை பார்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.
கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த நிலையில், எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.
பெங்களூர் நகர போலீஸ் கமிஷனராக, முன்னாள் முதல்வர் குமாரசாமியால் நியமிக்கப்பட்ட அலோக் குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, பாஸ்கர் ராவ் கமிஷனராக்கப்பட்டுள்ளார்.
லீவு கிடையாது
இந்த நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், ஜில்லா பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா, அடுத்த 3 மாதங்களுக்கு, வறட்சி நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட வசதியாக, லீவு எடுக்க வேண்டாம் என்றும், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
விவசாயிகள்
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு, எந்த தாமதமும் இன்றி, இழப்பீடு வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், தீவன உற்பத்தியையும் ஊக்குவிக்க வேண்டும்.
தப்பாக பயன்படுத்த கூடாது
அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் அரிசி விநியோகத்தை சீராக்கவும், எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்கவும், கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.
எஸ்கேப் ஆகும் எடியூரப்பா
கர்நாடகாவில் இந்த வருடம் போதிய பருவமழை பெய்யவில்லை. எனவே சுமார் 80 தாலுகாக்கள் வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வறட்சி நிவாரண நடவடிக்கையை எடுக்க விடாமல், கூட்டணி ஆட்சியை கலைப்பதில் எடியூரப்பா முக்கிய பங்கு வகித்தார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே, அதிகாரிகளுக்கு லீவு கொடுக்காமல் உழைக்க வைத்து, தனக்கு எதிராக, வரும் விமர்சனங்களில் இருந்து தப்பிக்க எடியூரப்பா முயல்வதாக கூறப்படுகிறது.