குரல் வாக்கெடுப்புக்கு விட்ட சபாநாயகர்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது எடியூரப்பா அரசு!
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் முதல்வர் எடியூரப்பா கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்து 4-ஆவது முறையாக முதல்வர் எடியூரப்பா பதவியேற்றார். எனினும் அவர் 31-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கர்நாடக ஆளுநர் வஜூபாய்வாலா உத்தரவிட்டுள்ளார்.
17 பேர் தகுதிநீக்கம்
இந்த நிலையில் எடியூரப்பாவோ இன்றைய தினமே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வருகிறார். மொத்தம் 224 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் நேற்று வரை 17 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துள்ளார்.
சுயேச்சை
இந்த நிலையில் சட்டசபையின் பலம் 207 ஆக உள்ளது. இதில் பெரும்பான்மைக்கு தேவை 103 அல்லது 104 ஆகும். இந்த நிலையில் எடியூரப்பா அரசுக்கு 105 பாஜக எம்எல்ஏக்களும் ஒரு சுயேச்சை எம்எல்ஏவும் என மொத்தம் 106 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
எனவே பெரும்பான்மை பலத்தை காட்டிலும் கூடுதலாக ஓரிரு இடங்களை பாஜக வைத்துள்ளது. இந்த நிலையில் சட்டசபையில் கூட்டம் தொடங்கியதும் முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார்.
14 மாதங்களில்
இதையடுத்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் எடியூரப்பா வெற்றி பெற்றதாக சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார். இதன் மூலம் ஆளுநர் உத்தரவின் பேரில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்தார். கடந்த 14 மாதங்களில் கர்நாடக சட்டசபை 3-ஆவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.