மத்திய அரசு அனுமதி அளித்ததும்.. மேகதாது அணை திட்டம் தொடங்கப்படும் - கர்நாடக முதல்வர் எடியூரப்பா
பெங்களூரு: மத்திய அரசு அனுமதி அளித்ததும் மேகதாது அணை திட்டம் தொடங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இது கர்நாடகாவின் மிக முக்கியமான திட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. ஒப்பந்த விதிகளின்படி காவிரியில் இருந்து தமிழ்நாடு தண்ணீர் பெற்று வருகிறது.
ஆனால் இந்த ஒப்பந்த விதிகளை மீறி கர்நாடக அரசின் இந்த தான்தோன்றித்தனமான நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேகதாது திட்டம்
ஆனால் பெங்களுரு நகரில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. எனவே மேகதாது திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று கர்நாடக அரசு விடாப்பிடியாக உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரத்து கடுமையாக பாதிக்கப்படும் என்று நமது மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருசேர எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு எதிர்ப்பு
தற்போது தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக கூறினார். நேற்று தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது என்று மிக முக்கிய கோரிக்கை விடுத்து இருந்தார்.
எடியூரப்பா பேட்டி
இந்த நிலையில் மத்திய அரசு அனுமதி அளித்ததும் மேகதாது அணை திட்டம் தொடங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடியூரப்பா நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது:- காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் கர்நாடகாவின் மிக முக்கியமான திட்டமாகும். இதனை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை. இது பெங்களுரு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்.
கைவிடும் பேச்சுக்கே இடமில்லை
மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு அளித்திருந்த கோரிக்கை முடித்து வைக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கர்நாடக அரசின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் மேகதாது அணை கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமரை சந்தித்து கோரிக்கை விடுத்து ஒரு நாள் முடிவதற்குள்ளேயே எடியூரப்பா இவ்வாறு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.