ஆட்சி நடத்துறதுக்குள்ள.. ஐய்யோ, அம்மா.. அங்கே இங்கே மாற்றி.. எடியூரப்பா நிலை யாருக்கும் வரக்கூடாது!
பெங்களூர்: அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி அடைந்திருந்த அமைச்சர்களை திருப்திப்படுத்தும் வகையில் அவர்களுக்கு கூடுதல் துறைகளை வழங்கியுள்ளார் எடியூரப்பா. இதன்மூலம் அமைச்சர்களின் நெருக்கடிக்கு அவர் பணித்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கலைந்ததன் காரணமாக எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சி தொடர்ந்தாலும், பாஜகவில் உள்ள முக்கால்வாசி எம்எல்ஏக்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று எடியூரப்பாவிடம் நெருங்கி வருகிறார்கள்.
அமைச்சரவை விரிவாக்கம்
இந்த நிலையில்தான் ஜனவரி 13-ஆம் தேதி அமைச்சரவையை விஸ்தரிப்பு செய்தார் எடியூரப்பா. இதன்மூலம் அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்ட அளவுக்கான அமைச்சர் பதவி இடங்களை நிரப்பி விட்டார். இதற்குமேல் நிரப்புவதற்கு இடம் இல்லை. ஆனாலும் அதிருப்தியாளர்கள் எடியூரப்பாவை குறிவைத்து தாக்கியபடி உள்ளனர்.
ஆபாச சிடி சர்ச்சை
அமைச்சர் பதவி கிடைக்காத சீனியர் எம்எல்ஏக்கள், எடியூரப்பா தொடர்புள்ள ஆபாச ஆடியோ சிடி ஒன்றை காட்டித்தான் மிரட்டி மிரட்டி அமைச்சர் பதவியை சிலர் வாங்கி விட்டதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இது ஒரு பக்கம் என்றால் அமைச்சரவையில் இடம் கிடைத்தவர்கள் கூட தங்களுக்கு பவர்ஃபுல் இலாகா கிடைக்கவில்லை என்று கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில்தான் சில துறைகளை பிரித்து அவர்களுக்கு கூடுதலாக ஒதுக்கியுள்ளார் எடியூரப்பா.
துறைகள் பிரிப்பு
மருத்துவ கல்வி அமைச்சர் மாதுசாமிக்கு கூடுதலாக வக்பு வாரியம் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிறிய நீர்ப்பாசனம், சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத்துறை ஆகியவை ஏற்கனவே இருந்து பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு மாற்றாக வக்பு வாரியம் துறை தரப்பட்டுள்ளது.
பிற கட்சி பிரமுகர்
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவி வந்த, கோபாலய்யாவுக்கு, கலால் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தக்கூடிய துறை இதுவாகும். காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி வந்த நாகராஜனுக்கு, ஏற்கனவே வகித்து வந்த துறைகளை தாண்டி உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் கரும்பு மேம்பாடு உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எடியூரப்பா தியாகம்
எடியூரப்பா தன்னிடமிருந்த திட்டத்துறை மற்றும் புள்ளியியல் துறை ஆகிய துறைகளையும் தியாகம் செய்து பேசிய நாராயண கவுடாவுக்கு வழங்கியுள்ளார். பாஜக சீனியர் தலைவரும், அமைச்சருமான அரவிந்த் லிம்பாவளிக்கு ஏற்கனவே வனத்துறை ஒதுக்கப்பட்டது. தற்போது கன்னடம் மற்றும் கலாச்சாரத்துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு துறைகளை ஒதுக்கீடு பிரித்துக் கொடுத்து ஆட்சியை ஓட்டி செல்வதற்கு தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறார் எடியூரப்பா.