10 வருடம் ஓடிவிட்டதே.. கருணாநிதியே உருகிய தருணம்.. எடியூரப்பா வணங்கிய பெங்களூர் திருவள்ளுவர் சிலை!
பெங்களூரின் அல்சூர் ஏரிக்கரையில் அமைந்து இருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெங்களூர்: பெங்களூரின் அல்சூர் ஏரிக்கரையில் அமைந்து இருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிலை திறந்து 10 வருடங்கள் முடிந்துள்ள நிலையில், அதற்கான விழா இன்று காலை கொண்டாடப்பட்டது.
கடந்த 2009ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி பெங்களூரில் உள்ள அல்சூர் ஏரிக்கரையில் திருவள்ளுவரின் சிலை அமைக்கப்பட்டது. பல எதிர்ப்புகளை மீறி, அப்போது கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா மூலம் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது.
மிகவும் பெரிய அளவில் நடந்த இந்த விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார்.
கடும் எதிர்ப்பு
அது காவிரி பிரச்சனை அதிகம் இருந்த 1991ம் ஆண்டு. அப்போது கர்நாடக முதல்வராக பங்காரப்பா இருந்தார். பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கம் அப்போது பெங்களூரின் அல்சூர் ஏரிக்கரையில் தமிழ்ப்புலவர் திருவள்ளுவருக்கு சிலை வைக்க திட்டமிட்டது. இதற்கான அனுமதியை பெற்று சிலையும் நிறுவப்பட்டது.
ஆனால் எதிர்ப்பு
ஆனால் கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாகவும், பங்காரப்பாவின் மனமாற்றம் காரணமாகும் கடைசி நேரத்தில் இந்த சிலை திறக்கப்படாமல் அப்படியே மூடி வைக்கப்பட்டது. அதன்பின் 18 வருடங்கள் அந்த சிலை எந்த அரசாலும் திறக்கப்படாமல் சாக்கு போட்டு மூடி வைக்கப்பட்டு இருந்தது. இது தமிழர்களை பெரிய அளவில் வருத்தம் கொள்ள செய்தது.
எடியூரப்பா
இந்த நிலையில் 18 வருடங்களுக்கு பின் கடந்த 2009ல்தான் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி எடியூரப்பா முதல்வராக இருந்த போது இந்த சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவிற்கு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அழைக்கப்பட்டு இருந்தார். இதில் சிலையை பார்த்து உருகிய கருணாநிதி, எடியூரப்பாவை வாயார தம்பி என்று அழைத்தார்.
என்ன பேசினார்
அதேபோல் இந்த சிலை நிறுவியது தனக்கு பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. 18 வருடமாக எனக்கு இருந்த மனக்கசப்பை நீங்கள் நீக்கி இருக்கிறீர்கள் என்று கூறி எடியூரப்பாவை கருணாநிதி வாழ்த்தினார். இவ்வளவு சிறப்பான வரலாறு கொண்ட பெங்களூர் திருவள்ளுவர் சிலை திறந்து கடந்த 9ம் தேதியோடு 10 வருடம் முடிந்துவிட்டது.
மரியாதையை செய்தார்
இதனால் 10 வருட திறப்பு விழா இன்று காலை கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அந்த திருவள்ளுவர் சிலைக்கு இன்று காலை முதல்வர் எடியூரப்பா மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சூழ, மாலை அணிவித்து எடியூரப்பா வணக்கம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் பெங்களூர் தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர்.