சிகிச்சைக்கு சேர்ந்த 8 நாளில் கொரோனா நெகட்டிவ்.. கர்நாடக முதல்வர் எடியூரப்பா டிஸ்சார்ஜ்
பெங்களூர்: கொரோனா நோய் பாதிப்பால், சிகிச்சை பெற்று வந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
77 வயதாகும் எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த 2ஆம் தேதி பெங்களூரு நகரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றபடியே அரசு அலுவல்களையும் கவனித்தபடி இருந்தார்.
இந்த நிலையில், கொரோனா அறிகுறிகள் குறையத் தொடங்கியதால், மறுபடியும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் முழுக்க குணமடைந்து விட்டதாக தெரிய வந்தது. எனவே இன்று அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவலை கர்நாடக அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
டிசம்பருக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும்- 2 மாதங்களில் விலை நிர்ணயம்: சீரம் இன்ஸ்டிடியூட்
கர்நாடகாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, வனத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் பி.சி.பாட்டில் ஆகியோரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.