பெலகாவி யாருக்கு சொந்தம்? கர்நாடகா- மகாராஷ்டிரா முதல்வர்கள் மீண்டும் கடும் மல்லுக்கட்டு
பெங்களூரு/மும்பை: கர்நாடகா - மகாரஷ்டிரா எல்லை பகுதியான பெலகாவியை முன்வைத்து இரு மாநில முதல்வர்களான எடியூரப்பாவும் உத்தவ் தாக்கரேவும் மல்லுக்கட்டி வருகின்றனர்.
முந்தைய மும்பை மாகாணத்தின் ஒருபகுதியாக இருந்தவை பெலகாவி மற்றும் அதனை சுற்றிய பகுதிகள் என்பது மகாராஷ்டிராவின் கருத்து. கர்நாடகா எல்லையில் மராத்தி மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்பது நீண்டகால சர்ச்சை.
இந்த பின்னணியில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், கர்நாடகா ஆக்கிரமித்திருக்கும் மராத்தி மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைப்பதே எல்லை போராளிகளுக்கான உண்மையான அஞ்சலி என குறிப்பிட்டிருந்தார்.
உத்தவ் தாக்கரேவின் இந்த கருத்துக்கு கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கூறிய எடியூரப்பா, உத்தவ் தாக்கரேவின் கருத்து நல்லிணக்கத்துடன் வாழும் மக்களிடையே பெரும் வலியை ஏற்படுத்தியுள்ளது. உத்தவ் தாக்கரே உண்மையான இந்தியராக இருந்தால் கூட்டாட்சி முறைக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் கர்நாடகாவில் கன்னடர்களுடன் மராத்தி மொழி பேசும் மக்கள் நல்லிணக்கமாக அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் மகாராஷ்டிரா மாநில எல்லையில் வசிக்கும் கன்னடர்களும் மராத்தி மொழி பேசும் மக்களுடன் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் உத்தவ் தாக்கரே பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கர்நாடகாவின் ஒரு அங்குலம் நிலத்தை கூட எப்போதும் விட்டுத்தரமாட்டோம் என்றார் எடியூரப்பா.
பாஜக மேலிடத்திடம் பேசி.. சாதித்தே விட்டாரே எடியூரப்பா.. 7 அமைச்சர்களுடன் அமைச்சரவை விஸ்தரிப்பு
ஏற்கனவே தமிழகத்தின் தாளவாடி கர்நாடகாவுக்கு சொந்தம் என வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் அடாவடித்தனம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.