கர்நாடகாவில் ஜேடிஎஸ்- உடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க தயங்கமாட்டோம்- மல்லிகார்ஜூன கார்கே
பெங்களூர்: கர்நாடகாவில் ஜேடிஎஸ் உடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி தயங்காது என அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சூசகமாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இந்துத்துவா கொள்கையை முன்வைக்கும் சிவசேனாவுடன் காங்கிரஸ்- என்சிபி இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. இதனையடுத்து நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்க சிவசேனா முயற்சித்து வருகிறது.
கோவாவில் பாஜகவால் கழற்றிவிடப்பட்ட ஜிஎஃப்பி கட்சியுடன் சிவசேனா கை கோர்த்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் 5-ந் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் பாஜக குறைந்தது 6 தொகுதிகளிலாவது வென்றால்தான் பெரும்பான்மை கிடைக்கும். இல்லையெனில் ஆட்சி கவிழும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் இன்று பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க, மதச்சார்பற்ற கொள்கையை வலிமைப்படுத்த வேண்டிய சூழ்நிலை வரும் போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி சரியான முடிவை எடுப்போம் என்றார்.. மேலும் 15 தொகுதிகளிலும் வெல்வது எங்கள் இலக்கு. டிசம்பர் 9-ந் தேதிதான் கர்நாடகா அரசியல் குறித்த ஒரு தெளிவான நிலை தெரியவரும். நிச்சயம் நல்ல செய்தி வரும். காத்திருங்கள் என்றார்.
மேலும் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சோனியா காந்தி விரும்பவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமரத்தான் அவர் விரும்பினார். ஆனால் பாஜகவை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற சிவசேனாவை ஆதரிக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்ததால் சோனியா காந்தி ஒப்புக் கொண்டார். சோனியாவிடம் இடதுசாரிகள் உள்ளிட்ட பிறகட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதால் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கலாம் என சோனியா முடிவெடுத்தார் என்றார்.