கைதாகிறாரா டிகே சிவக்குமார்.. காங்கிரசில் அடுத்த பரபரப்பு.. மனுவை ஏற்க மறுத்தது நீதிமன்றம்
பெங்களூரு: கைது செய்வதில் இருந்து பாதுகாப்பு கோரிய மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளதால் காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பணமோசடி வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை டிகே சிவக்குமாருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை எதிர்த்து சிவக்குமார் தாக்கல் செய்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு இன்று டெல்லி வருமாறு கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் நேற்று அனுப்பி இருந்தது
இதையடுத்து டிகே சிவக்குமார், அமலாக்கத்துறையின் புதிய சம்மனுக்கு எதிராக கர்நாடகா உயர்நீதின்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை தன்னை கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்குமாறு டிகே சிவக்குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் சிவக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் டிகே சிவக்குமார் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு நிலவுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறையால் காங்கிரஸ் கட்சியின் டிகே சிவக்குமாரும் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டது
அமலாக்கத்துறையின் புதிய சம்மன் குறித்து முன்னதாக கருத்து தெரிவித்த டிகே சிவக்குமார், "சம்மனை பார்த்து பதற்றமாகவில்லை. பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை. டென்சன் ஆகவேண்டிய தேவையே இல்லை.. நான் கற்பழிக்கவில்லை, திருடவில்லை, எனக்கு எதிராக எதுவும் இல்லை" என்றார். மேலும் கடந்த இரண்டு வருடங்களில் எனது 84வயது தாயாரின் சொத்து பினாமி சொத்து என பல்வேறு விசாரணை அதிகாரிகளால் இணைக்கப்பட்டுள்ளது என்றும் சிவக்குமார் தெரிவித்தார்.