ஆபரேஷன் லோட்டஸ்! சக்சஸ்! பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்?.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு?
பெங்களூர்: பாஜகவுக்கு கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தாவுவதால் குமாரசாமியின் அரசுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க காங்கிரஸின் தலைவராக இருந்த சோனியாகாந்தி, மஜதவின் தேவகௌடாவிடம் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாகவும் அவ்வாறு ஆதரிக்கும் பட்சத்தில் குமாரசாமியே முதல்வராக பதவியேற்கட்டும் என்று தெரிவித்தார்.
முதல்வர் வருத்தம்
இதையடுத்து காங்கிரஸ்- மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தது. கடந்த சில மாதங்களாக சுமூகமாக போய் கொண்டிருந்த உறவில் சிக்கல் நிலவியது. ஒரு விழாவில் முதல்வர் பதவி என்பது ரோஜா முட்கள் மாதிரி, சுகமானது அல்ல என்று வருத்தப்பட்டார்.
கண்ணீர் விட்ட முதல்வர்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜேடிஎஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தனக்கு டார்ச்சர் செய்வதாகவும் இதை கட்சி மற்றும் மாநிலத்தின் நலன் கருதி தான் பொறுத்துக் கொள்வதாகவும் குமாரசாமி கண்ணீர் விட்டு கதறினார்.
பாஜக தீவிரம்
இதன் மூலம் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் முற்றியது வெளிப்பட்டது. 104 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் எம்எல்ஏக்களை இழுக்க பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.
டெல்லியில் முகாம்
காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்களை இழுக்க தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏவான ரமேஷ் ஜார்கிகோளி, அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்து வரும் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏக்களான நாகேந்திரா மற்றும் ஆனந்த்சிங் ஆகிய 3 பேரும் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாகவும், அவர்கள் பாஜக தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜகவில் 12 காங் எம்எல்ஏக்கள்
ஆனால் அவர்கள் 3 பேர் தவிர மேலும் 9 எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங், நாகேந்திரா, பி.சி.பட்டீல், பீமா நாயக், ஹொலகேரி, பிரதாப் பட்டீல், கணேஷ் ஹூக்கேரி, உமேஷ் ஜாதவ் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.